உகாண்டா மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு இடையேயான எல்லைப் பகுதியில் எபோலா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் முற்றிலும் முடங்கியுள்ளது.
எபோலா வைரஸ் உகாண்டாவுக்குள் பரவாமல் தடுக்கும் நோக்கில் அந்நாட்டு அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக, எல்லையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான சரக்கு லொறிகள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து தேங்கி நிற்கின்றன.
இந்த லொறிகளில் ஏற்றி வரப்பட்ட பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட எளிதில் அழுகக்கூடிய உணவுப் பொருட்கள் பல நாட்களாகக் காத்திருப்பதால் லொறிகளிலேயே அழுகி வீணாகி வருகின்றன.
இதனால் தங்களுக்குப் பல கோடி ரூபாய் அளவில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இரு நாட்டு வர்த்தகர்களும் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.