“எங்கே எங்கே எமது உறவுகள்” என்ற கேள்வியும், “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” என்ற கோசமும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்ட விடயம் 17 ஆண்டுகளில் பொய்யாகத்தான் முடிந்திருக்கிறது. அது இன்னும் நடைபெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஆகவே பன்னாட்டுப் பொறிமுறை என்று சொல்லப்படுகிற சர்வதேச பொறிமுறையின் ஊடாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்குரிய நீதி கிடைக்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுர்த்தி சிறிநேசன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17வது ஆண்டு நினைவேந்தல் வார நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் நேற்றைய தினம் (12) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அனுஷ்டிக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தலைமையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வை.தினேஸ் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவேந்தல் வார நிகழ்வுகள் ஆரம்பமாயின.
இதன்போது முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவாக வழங்கப்படுகின்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்,
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக நாங்கள் ஒன்றுகூடியிருக்கிறோம். முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்று 17 ஆண்டுகள் கடந்திருக்கின்றன.
இந்த ஆண்டும் வழக்கம் போல முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், வலிகளை நினைவுகூர்தல், முள்ளிவாய்க்கால் கஞ்சிக்காக எங்களுடைய மக்கள் ஏங்கி நின்ற அந்த நிலைமை, இவற்றை வெளிக்காட்டக்கூடிய விதத்தில் இன்று மே மாதம் 12ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரை இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இன்று முதல் நாள் நிகழ்வு காந்தி சதுக்கத்தில் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வலிகளை வழிகளாக மாற்றுவோம். நாங்கள் சுமந்த வலிகளை விடுதலைக்கான வழிகளாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
எமது மக்கள் 1956ஆம் ஆண்டிலிருந்து, சுதந்திரம் பெற்ற 1948ஆம் ஆண்டுக்குப் பிறகு, 1956ஆம் ஆண்டு இக்னியாகலை படுகொலை என்று 153 பொதுமக்கள், அதுவும் தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். அன்று தொடங்கிய இனப்படுகொலை 2009ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 19ஆம் திகதி முடிந்ததாகக் கூறினாலும், இன்றைய நிலையிலும் கூட அந்த நினைவுத்தூபிகளை அழிக்கின்ற செயற்பாடுகள், தமிழர்களின் மனங்களில் இருக்கின்ற அந்த எண்ணங்களை, சிந்தனைகளை, நினைவேந்தலை அழிக்கின்ற செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
“எங்கே எங்கே எமது உறவுகள்” என்ற கேள்வியும், “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” என்ற கோஷமும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்ட விடயம் 17 ஆண்டுகளில் பொய்யாகத்தான் முடிந்திருக்கிறது. அது இன்னும் நடைபெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஆகவே பன்னாட்டுப் பொறிமுறை என்று சொல்லப்படுகின்ற சர்வதேச பொறிமுறையின் ஊடாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்குரிய நீதி கிடைக்கவேண்டும். அந்த மக்கள் உயிர்களை இழந்தது மட்டுமல்லாமல், நீதிக்காக 17 ஆண்டுகள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும், நீதி கிடைக்கவில்லை.
ஆகவே, அநுர குமார திசாநாயக்க தலைமையில் அமைந்திருக்கிற இந்த புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உரிய பதில் அளிக்கவேண்டும்.
கடந்த காலத்தில் பல அரசாங்கங்கள் இருந்தன. ராஜபக்ஷ அரசாங்கம் இருந்தது. மைத்திரி அரசாங்கம் இருந்தது. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இருந்தது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இருந்தது. இந்த அரசாங்கங்கள் எல்லாம் மொத்தத்தில் ஏமாற்றத்தைத்தான் மக்களுக்கு கொடுத்துச் சென்றிருக்கின்றன. இப்போது பல நம்பிக்கைகளை ஊட்டிய வண்ணம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றிருக்கிறது. எனவே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கொல்லப்பட்ட உறவுகள், கடத்தப்பட்ட உறவுகள், இந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் மிகுந்த வலிகளைச் சுமந்த உறவுகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் நீண்ட காலமாக அவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
அதுமட்டுமன்றி, இன்றைய நிலையில் இளைஞர்கள் இதைப் பற்றி சிந்திக்கக்கூடாது என்ற அடிப்படையிலோ தெரியவில்லை, போதை, மதுசார பழக்கவழக்கங்கள் இளைஞர்கள் மத்தியில் பரப்பப்பட்டிருக்கின்றன. அளவுக்கதிகமான மதுபான விற்பனை நிலையங்கள் வடக்கு, கிழக்கில் திறக்கப்பட்டிருக்கின்றன. இது இளைஞர்களின் உணர்வுகளை அழித்து அவர்களை நடைபிணங்களாக மாற்றுகின்ற ஒரு செயற்பாடாகக் கூட அமைந்திருக்கலாம். எனவே இளைஞர்கள், யுவதிகள் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை கவனிக்கவேண்டும்.
எங்களுடைய பகுதிகளில் நாங்கள் மதுபான தவறணைகளை கேட்கவில்லை. மக்களுக்குரிய நீதியைத் தான் கேட்கிறோம். எனவே உணர்வுகளை அழிக்கக்கூடிய விதத்தில் போதைப்பொருட்களை விற்பனை செய்வதும், அளவுக்கதிகமாக மதுபான தவறணைகளைத் திறப்பதும் தமிழ் மக்களின் உணர்வுகளை அழித்து அவர்களைக் களியாட்டப் பிரியர்களாக மாற்றுகின்ற ஒரு செயற்பாடாகக் கூட இருக்கலாம். ஆகவே, வலிகளைச் சுமந்த நாம் வழிகளைத் தேட வேண்டும். விடுதலைக்கான வழிகளைத் தேடுவதாக இருந்தால் கடந்த காலத்தில் நாங்கள் பட்ட கஷ்டங்கள், அவலங்கள், அநியாயங்களை நாங்கள் மறக்கக்கூடாது.
அடுத்து வரும் சந்ததிகளுக்கும் இவற்றைச் சொல்ல வேண்டும். இல்லையென்றால், அவர்கள் இந்தப் போரில் பாதிக்கப்பட்ட எமது இனத்தின் வலிகளை உணராமல் இருந்துவிடுவார்கள். எனவே, இதை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசெல்வதற்கான இந்த செயற்பாடுகள் 17 வருடங்கள் கடந்தும் தொடர்கிறது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
எனவே, தயவுசெய்து இளைஞர்கள், யுவதிகள் களியாட்டங்களில் அக்கறை கொள்ளாமல் இந்த வலிகளில் பங்கேற்று எங்களுடைய விடுதலைக்காகத் தொடர்ந்தும் சிந்திக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.