திருகோணமலை, உப்பாறு பகுதியில் மகாவலி கங்கையை அண்டி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 18 டிங்கி படகுகளுடன் இரு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கிழக்கு கடற்படை கட்டளையின் ‘கோகண்ண’ கடற்படை கப்பல் பிரிவினர், கடந்த வெள்ளிக்கிழமை (06) உப்பாறு பாலத்திற்கு அருகிலுள்ள மகாவலி கங்கை பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 18 டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு சந்தேக நபர்களும் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 46 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மணல் மற்றும் டிங்கி படகுகள் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.