மேற்காசியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை ஊடாக சென்ற கப்பல்கள் மீது செவ்வாய்க்கிழமை (28) ஈரான் நடத்திய தாக்குதலுக்கு “வலுவான பதிலடியாக” இந்தத் தாக்குதல்கள் அமைந்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈராக்கில் உள்ள ஈரானிய நிழற்படைகள் மீது அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்கு மறுநாளே இந்த மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக இணைந்து ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியபோது, இந்தப் போர் சில வாரங்கள் மட்டுமே நீடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால், தற்போது 5 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
இந்நிலையில், சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மானை ட்ரம்ப் சந்தித்ததாகவும், பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைக்கவே சவூதி அரேபியா விரும்புவதாக அவர் தெரிவித்ததாகவும் ‘Axios’ செய்தி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
சில நாட்கள் அமைதிக்குப் பிறகு இந்த மோதல் மீண்டும் வெடித்துள்ளது. தூதரக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியதால் இரு தரப்பும் சில நாட்களாகத் தாக்குதல்களை நிறுத்தி வைத்திருந்தன. டொனால்ட் ட்ரம்ப் இதனை “மிகவும் நட்புறவான பேச்சுவார்த்தைகள்” என்று குறிப்பிட்டபோதிலும், அத்தகைய பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்று தெஹ்ரான் மறுத்தது.
தாக்குதல்கள் குறித்து அறிவிக்கப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்கப் போகிறோம். இப்போது தாக்குவதற்கான முறை எங்களுடையது. தாக்குதல் வரப்போகிறது என்பது அவர்களுக்கும் தெரியும்; அதைச் செய்ய வேண்டாம் என்று அவர்கள் எம்மிடம் கேட்டுக்கொண்டனர்” என்றார்.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மற்றும் கட்டளை மையத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மேலும், எச்சரிக்கைகளைப் புறக்கணித்துச் சென்ற 3 எண்ணெய் தாங்கிக் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையில் தாக்கியதாகவும் கூறியுள்ளது.
ஈராக்கில் உள்ள ஈரானிய ஆதரவு பெற்ற ‘பிரபலமான அணிதிரட்டல் படைகள்’ (PMF) மீதான அமெரிக்க- – சவூதி கூட்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்ததாக PMF தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலை ஈராக் அரசு தனது இறையாண்மைக்கு எதிரானது எனக் கண்டித்துள்ள போதிலும், இத்தாக்குதல்கள் ஈராக் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்தே நடத்தப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.