அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்வதற்கு ஈரான் புதியதொரு சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேல், அமெரிக்காவுக்கு மிக முக்கிய உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்துள்ளதாக சிஎன்என் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் முறிவடையும் நிலையை எட்டியுள்ள சூழலில், இந்தத் தகவல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்பைக் கொலை செய்யக்கூடிய சாத்தியமான திட்டங்கள் குறித்து அமெரிக்க உளவுத்துறை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து கண்காணித்து வந்த போதிலும், இந்த வாரம் இஸ்ரேலிடமிருந்து வந்த எச்சரிக்கையானது மிகவும் புதியது மற்றும் ஒரு குறிப்பிட்ட சதித்திட்டத்தை விவரிப்பதாக அமைந்துள்ளது.
இஸ்ரேல் எச்சரித்த இந்த சதித்திட்டத்தின் விரிவான விபரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அத்துடன், இந்தத் தகவலை அமெரிக்கா இன்னும் சொந்தமாக ஆய்வு செய்யவில்லை எனவும், இஸ்ரேல் எச்சரிக்கும் வரை தாங்கள் இதைக் கண்காணிக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் இந்த அறிக்கை முற்றிலும் உண்மையானதா அல்லது ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதற்காக ட்ரம்பின் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்த இஸ்ரேல் எடுக்கும் முயற்சியா என்ற சந்தேகத்தையும் சில அமெரிக்க அதிகாரிகள் எழுப்பியுள்ளனர்.
“அவர்கள் அமெரிக்கத் தலைவரான என்னை வீழ்த்த விரும்புகிறார்கள். நான் ஈரானின் அனைத்துப் பட்டியல்களிலும் இருக்கிறேன் என்பதை அறிந்துகொண்டேன். இதுவரை நான் அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கிறேன், ஆனால் அது நீடிக்காமல் போகலாம். இவர்கள் கொடூரமான, நோய்வாய்ப்பட்ட மனிதர்கள்; இந்த புற்றுநோயை நாம் ஆரம்பத்திலேயே வேரறுக்க வேண்டும்” என புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் ட்ரம்பின் உத்தரவின் பேரில் ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானி ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே ஈரான் ட்ரம்பைக் குறிவைப்பதாக அமெரிக்கா நீண்டகாலமாகக் கூறிவருகிறது. மேலும், போரின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட ஈரானின் அதிஉச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கின் போதும் ஈரானிய மக்கள் டிரம்பிற்கு மரண தண்டனை வழங்கக் கோரி முழக்கமிட்டிருந்தனர்.
ஈரானுடன் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராஜதந்திர முயற்சிகள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆழ்ந்த சந்தேகம் கொண்டுள்ளார். லெபனானில் இஸ்ரேல் நடத்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்தும் இருவருக்கும் இடையே முரண்பாடுகள் நீடிக்கின்றன. இவ்வாறான சூழலில், ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகிய இருவரும் வியாழக்கிழமை தொலைபேசியில் உரையாடியுள்ளதுடன், நெதன்யாகு விரைவில் வொஷிங்டன் வரவுள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான 60 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் தற்பொழுது சீர்குலைந்துள்ளது. எனினும், ஆகஸ்ட் மாதப் பாதிக்குள் ஒரு அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக இரு நாடுகளும் திரைமறைவில் தொடர்ந்து இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.