வெலிக்கடை சிறைச்சாலைக்கு கடந்த 7ஆம் திகதி திடீர் விஜயம் மேற்கொண்ட அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை 1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க ஆணைக்குழு சட்டத்தை மீறும் செயலாகும். இது குறித்து விசாரிப்பதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை சிறைச்சாலை அதிகாரி ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
விசேட அறிக்கையொன்றை வியாழக்கிழமை (9) வெளியிட்டு இவ்விடயத்தை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் மரணங்கள், மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அத்துடன், கடந்த 7ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை மற்றும் இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் ஆணைக்குழு தனது கடுமையான கரிசனையை வெளியிட்டுள்ளது.
இந்த விசாரணைகள் மூலம் நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைக்கான பின்னணி, வெலிக்கடையில் ஆணைக்குழுவிற்கு அனுமதி மறுக்கப்பட்டமை மற்றும் இடமாற்றப்பட்ட கைதிகள் எதிர்கொண்ட சித்திரவதைக் குற்றச்சாட்டுகள், அதிலும் குறிப்பாக சிறை அதிகாரிகளின் காவலில் இருந்தபோது இரு கைதிகள் மரணமடைந்தமைக்கான காரணங்கள் ஆகியவை ஆராயப்பட்டு வருகின்றன.
கைதிகள் இடமாற்றப்பட்ட சிறைச்சாலைகளுக்கு ஆணைக்குழு மேற்கொண்ட விஜயங்களின் போது, பல கைதிகள் காயமடைந்திருந்ததோடு அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் தாமதிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இக்கைதிகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வாறான முறையான சிகிச்சைத் தாமதங்கள் ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக அமையலாம். 7ஆம் திகதியன்று வெலிக்கடை சிறைச்சாலையில் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டமையானது 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தை மீறும் செயலாகும்.
சித்திரவதைகள் குறித்த தகவல்கள் கிடைக்கும் போது, சிறைச்சாலைகளுக்குள் எந்த நேரத்திலும் முன்அறிவிப்பின்றி திடீர் விஜயங்களை மேற்கொள்வதே ஆணைக்குழுவின் சட்டப்பூர்வ அதிகாரத்திற்கு இன்றியமையாததாகும். எனவே, ஒரு முக்கியமான தருணத்தில் அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து விசாரிப்பதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை சிறைச்சாலை அதிகாரி ஆகியோருக்கு ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
தற்போது சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் இந்த விசாரணைகள் தொடர்பில் ஆணைக்குழு இதுவரை எந்தவொரு இறுதி முடிவிற்கும் வரவில்லை. நடந்து வரும் இந்த விசாரணைகளின் முன்னேற்றங்கள் அவ்வப்போது அறிக்கைகள் மூலம் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படும்.