இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் முதன்மைத் பிரதி உதவிச் செயலாளர் (Principal Deputy Assistant Secretary) நிக்கோல் சூலிக் (Nicole Chulick) மற்றும் அமெரிக்கத் தூதரகத்தின் தற்காலிக தூதுவர் (Charge d’Affaires) ஜேன் ஹொவெல் (Jayne Howell) ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (22) அமைச்சில் வைத்துச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களது அர்ப்பணிப்பை இருதரப்பும் மீள உறுதிப்படுத்தியுள்ளன.
இது குறித்து தனது ‘X’ (முன்னாள் ட்விட்டர்) சமூக ஊடகப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பதவியேற்பைத் தொடர்ந்து இலங்கையுடனான இருதரப்பு கூட்டுறவை மேம்படுத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் வழங்கியுள்ள உயர் அங்கீகாரத்தையும் பாராட்டுக்களையும் நிக்கோல் சூலிக் இப் பேச்சுவார்த்தையின் போது வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் விஜித ஹேரத், அமெரிக்காவினால் அண்மையில் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 ‘பெல்’ (Bell) ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் கடலோர காவல்படையின் நான்காவது விசேட கப்பல் (Coast Guard Cutter) ஆகியவற்றிற்காக வாஷிங்டன் நிர்வாகத்திற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பல்துறை சார்ந்த இருதரப்பு உறவுகளை முன்னோக்கி நகர்த்துவது குறித்து இப் பேச்சுவார்த்தையின் போது அவதானம் செலுத்தப்பட்டதுடன், ‘டிட்வா’ சூறாவளி (Cyclone Ditwah) அனர்த்தத்திற்குப் பின்னரான இலங்கையின் மீள் எழுச்சி நடவடிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழலால் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவிற்கு அமைச்சர் விஜித ஹேரத் விரிவாக விளக்கமளித்தார்.
தற்போது நடைமுறையிலுள்ள கூட்டுறவுத் திட்டங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரப் பங்களிப்பை புதிய துறைகளுக்கும் விரிவுபடுத்துவதற்கும் இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்