பொருளாதார நெருக்கடி காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் மறுபடி தொடங்கப்பட்ட நாளில் இருந்து 30 மாதங்களுக்குள் அதனை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசோமாடா அகியோ ஆகியோருக்கு இடையில் நேற்று (12) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) பிரதிநிதிகள் குழுவொன்றும் கலந்துகொண்டிருந்தது.
இத்திட்டத்திற்கான கடன் தொகை மற்றும் ஒப்பந்த மதிப்பு தொடர்பான அனுமதிகளை விரைவுபடுத்துவதே இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக இருந்ததுடன், அந்த நடைமுறைகள் பூர்த்தியானதும் வரும் நவம்பர் மாதத்தில் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க முடியும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கிறது.
இரண்டாவது முனையத்தின் கட்டுமானப் பணிகள் முதன்முதலில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் 75 பில்லியன் யென் கடன் உதவி வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதன் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
அதன் பின்னர், 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இதற்கான கொள்முதல் செயல்முறைகள் மீண்டும் தொடங்கப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டில் ஏலக் கோரல்கள் நிறைவு செய்யப்பட்டு, தற்போது உரிய ஒப்பந்தக்காரர்களைத் தேர்ந்தெடுக்கும் இறுதி வாரத்திற்கு இத்திட்டம் வந்துள்ளது.
அதேபோல், இலங்கை அரசாங்கம், ஜப்பானிய அரசாங்கம் மற்றும் JICA நிறுவனத்துடன் நடத்திய பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர், தற்போதைய அரசாங்கத்தின் மீதுள்ள நம்பகத்தன்மையின் அடிப்படையில், இத்திட்டத்தை முடிப்பதற்குத் தேவையான கடன் விநியோகத்தை வழங்க ஜப்பானிய தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்திற்குத் தேவையான கடன் தொகை குறித்து நிதி அமைச்சுடன் விரைவில் கலந்துரையாடி ஒப்புதலைப் பெற அமைச்சர் இங்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது JICA பிரதிநிதிகள் குழு, முதற்கட்டமாக கடன் தொகையை உறுதிசெய்து கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்றும், இரண்டாம் கட்டமாக கலந்துரையாடப்பட்ட விலையின் அடிப்படையில் ஒப்பந்தத்தை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
கடும் காற்று; அச்சுவேலி தீர்த்தங்குளத்தில் தீ பரவல்
யாழ்ப்பாணம், அச்சுவேலி தீர்த்தங்குளம் (வல்லை களப்பு) பகுதியில் நேற்று (12) இரவு கடும் காற்று காரணமாக பாரிய தீ பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
யாரோ ஒருவர் குப்பைகளுக்கு வைத்த தீ, காற்றின் வேகம் காரணமாகக் களப்பு பகுதி முழுவதும் பரவி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
பலத்த காற்று வீசியதால், தீ வேகமாகப் பரவி பல ஏக்கர் புற்தரைகள் எரிந்து சாம்பலாகின. அத்துடன், சிறிய உயிரினங்களின் வாழ்விடமாக விளங்கும் இக்களப்பு பகுதி பாரியளவில் சேதமடைந்துள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் அச்சுவேலி பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். அதனையடுத்து, பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர்.
அத்துடன் யாழ்ப்பாணம் மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, நீண்ட போராட்டத்திற்குப் பின் தீ முற்றாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.