பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன் இளவாலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கும், மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த காணிக்குள் பாராளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இன்று திங்கட்கிழமை (27) இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலம் அளிக்க அர்ச்சுனா இராமநாதனை அழைத்து, வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், அவரை கைது செய்துள்ளனர். இதன்போது அவரது கைது துப்பாக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேவேளை, குறித்த சம்பவத்தில் தனது காணிக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னை அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அர்ச்சுனாவுடன் முரண்பட்டவர்களில் பெண்ணொருவரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்படுத்திய வேளை, பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது .
அதன்போது குறித்த பெண் ஒரு வயது குழந்தைக்கு தாய் எனவும் , குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய தேவை உள்ளதாகவும் மன்றுக்கு சுட்டிக்காட்டிய போது , குழந்தையை தாயுடன் இருக்க மன்று அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.