தனது வருடாந்த கனடா தினச் செய்தியில், பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) ஒற்றுமை, தயாள குணம் மற்றும் வலிமை குறித்து உரையாற்றினார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கனடாவின் இறையாண்மைக்கு சவால்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையிலேயே அவரது இந்த உரை அமைந்துள்ளது.
இரண்டரை நிமிடங்கள் நீடித்த அந்த உரையில், கார்னி நாட்டின் இயற்கை எழில், நிலப்பரப்பு மற்றும் மக்களின் பன்முகத்தன்மையைக் கொண்டாடினார். 1867 ஆம் ஆண்டில் நான்கு குடியேற்றங்கள் இணைந்து ஒரே நாடாக உருவெடுத்தபோது, அவர்கள் “தனித்தனியாக இருந்ததை விட ஒட்டுமொத்தமாக இணைந்து ஒரு மகத்தான ஒன்றை உருவாக்க முடியும்” என்று பந்தயம் கட்டியதை அவர் சுட்டிக்காட்டினார்.
கிழக்கையும் மேற்கையும் இணைக்க உதவிய தேசிய இரயில்வே மற்றும் ‘டிரான்ஸ் கனடா ஹைவே’ (Trans Canada Highway) போன்ற நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை கார்னி எடுத்துரைத்தார்.
“கனடியர்கள் ஒரு வலுவான, இன்னும் கூடுதலான ஒற்றமையுள்ள நாட்டை வெறுமனே கற்பனை செய்து கொண்டிருக்கவில்லை,” என்று அவர் கூறினார். “நாம் நமது கருவிகளைக் கையில் எடுத்து, அப்படியான ஒரு நாட்டை நேரில் கட்டமைத்துள்ளோம்.”
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள “தீர்க்கமான தருணத்தையும்”, அதே போல் “நம்மைப் பிரிக்க நினைக்கும் சக்திகளையும்” ஒப்புக்கொள்வதிலிருந்து கார்னி பின்வாங்கவில்லை.
அவரது இந்தக் கருத்துக்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்து வரும் நாடு இணைப்புக் கொள்கை (annexation) தொடர்பான தொடர் அச்சுறுத்தல்களையும், வரும் இலையுதிர்காலத்தில் கனடாவிலிருந்து பிரிந்து செல்வது குறித்த பொதுவாக்கெடுப்பில் வாக்களிக்க ஆல்பர்ட்டா (Alberta) மாகாண மக்கள் தயாராகி வருவதால் நாட்டின் ஒற்றுமைக்கு ஏற்பட்டுள்ள சவால்களையும் குறிப்பதாகவே தெரிகிறது.
இதேவேளை, கியூபெக் (Quebec) மாகாணத்திலும் பிரிந்து செல்லும் கேள்வி இன்னும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
ஆயினும்கூட, கார்னி கனடாவின் விழுமியங்களையும் வலிமையையும் வலியுறுத்திக் கூறினார்.
“மில்லியன் கணக்கான முறை மீண்டும் மீண்டும் செய்யப்படும் சிறிய ஒற்றுமைச் செயல்பாடுகள், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்தால், எவரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாத அளவு அதிகமான விஷயங்களை நமக்கே நாம் தந்து கொள்ள முடியும் என்பதை நிரூபிக்கின்றன,” என்று அவர் கூறினார்.
கார்னி தனது உரையின் இறுதியில், சக கனடியர்களிடையே தயாள குணத்தையும் ஒற்றுமையையும் ஊக்குவித்ததுடன், அவர்களுக்கு மகிழ்ச்சியான கனடா தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
“நாம் தயாள குணத்தைக் காட்டும்போது, தயாள குணம் வளர்கிறது. நாம் ஒற்றுமையைத் தேடும்போது, ஒற்றுமை வளர்கிறது. நாம் உண்மையான கனேடியர்களாக இருக்கும்போது, கனடா வளர்கிறது. இதுவே நமது நம்பிக்கை. இது முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் வலுவாக உள்ளது