நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தென்மராட்சி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், வடகிழக்கில் ஊழல் செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் கைது செய்யாமல், அவர்களை மிரட்டி நிர்வாக விடயங்களில் தமது கட்சி அரசியலை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டினார்.
தெற்கில் சிலரை கைது செய்தாலும், வடகிழக்கில் உள்ள ஊழல் அதிகாரிகளை NPP அரசாங்கம் கைது செய்வதில்லை. அதற்குக் காரணம், வடகிழக்கில் NPP எதிர்பார்த்த மக்கள் ஆதரவு கிடைக்காத நிலையில், ஊழல் அதிகாரிகளை வைத்து தமது கட்சியினரின் நலனை பாதுகாப்பதே அவர்களின் திட்டம் என்று கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றத்தில் பல முறைகேடுகள் ஆதாரத்துடன் வெளிவந்த நிலையிலும், அதை மூடி மறைத்து வலுக்கட்டாயமாக ஆசிரியர் இடமாற்றங்களை செய்வதற்கு ஊழல் அதிகாரிகளை பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பிரதேச சபையில் தனது கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் இராஜினாமா செய்த நிலையில், பதில் உறுப்பினர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் கடிதம் வழங்க மறுக்கிறது என்றும், இதற்குப் பின்னால் ஊழல் அதிகாரிகள் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். வடக்கில் தமிழ் மக்கள் சார்ந்த சபை ஒன்று திறம்பட இயங்கக்கூடாது என்ற ஜேவிபியின் இன வாத சிந்தனையே இதற்குப் பிரதான காரணம் என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
தேர்தல் தொடர்பான கருத்து:
கடந்த தேர்தலில் யாழ் தொகுதியில் NPP சுமார் 80,000 வாக்குகளை பெற்று மூன்று ஆசனங்களை பெற்றது. ஆனால், தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையின்மையால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டதால்தான் NPP இந்த ஆசனங்களை பெற முடிந்தது என்று கஜேந்திரகுமார் தெரிவித்தார்