ரஷ்ய பல்கலைக்கழகத்தின் சிறப்பு தூதுக்குழு ஒன்று திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகவை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் ரஷ்ய மொழியை மேம்படுத்துதல் மற்றும் அதன் மூலம் கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் பல்கலைக்கழக மாணவர்களுக்காக ரஷ்ய மொழி நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவது, அவர்களின் சர்வதேச தொடர்பாடல் திறன்களையும் கல்வி பன்முகத்தன்மையையும் மேம்படுத்துவதற்கான முக்கியமான முன்னெடுப்பாக விவாதிக்கப்பட்டது.
மேலும், ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் பணியாற்றுவோருக்கு ரஷ்ய மொழிப் பயிற்சி வழங்குவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இதன் மூலம் சேவைத் தரத்தை உயர்த்துவதும், பிராந்தியத்தின் பொருளாதார நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டாண்மை மூலம் கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு புதிய சர்வதேச வாய்ப்புகள் உருவாகுவதோடு, சுற்றுலாத்துறைக்கும் புதிய பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.