முல்லைத்தீவு – விசுவமடு மகா வித்தியாலயத்தில் உள்ள 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான பாதுகாப்பற்ற கட்டடங்களை அகற்றி, புதிய கட்டடங்களை அமைப்பதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
அந்தப் பாதுகாப்பற்ற கட்டடங்களால் பாடாசாலை மாணவர்களுக்கு ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்பட்டால் முல்லை வலயக் கல்விப் பணிமனையே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது எச்சரித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ரவிகரன் மேலும் தெரிவிக்கையில்,
நான் பாடசாலைகளுக்கு நேரடியாக சென்று, பாடசாலைகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றேன்.
அந்த வகையில் விசுவமடு மகா வித்தியாலயத்தில் ஐம்பது வருடங்களுக்கும் மேற்பட்ட பழமையான கட்டடம் இருக்கின்றது.
அந்தக் கட்டடம் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அல்லது குறித்த கட்டடம் உரிய தொழில்நுட்பவியலாளர்களால் பார்வையிடப்பட்டு உரிய சீரமைப்பு வேலைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
அங்கு கூடுதலான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்நிலையில் இந்த பழைய கட்டடங்கள் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படாவிடின் அந்தக் கட்டடங்களால் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இவ்வாறான பாதுகாப்பற்ற பழைய கட்டடங்களால் அங்கு கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்கு முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனையே முழுப் பொறுப்பாகும்.
எனவே அந்த பழைய கட்டடங்களை அகற்றி புதிய கட்டடங்களை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது அந்தக் கட்டடங்களைச் சீரமைத்துக் கொடுக்கப்படுமா? இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் என்பதை அறிய விரும்புகின்றேன் என்றார் ரவிகரன்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரால் சுட்டிக்காட்டப்பட்ட குறித்த விடயத்தினை தாம் முல்லை வலயக் கல்விப் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்துவதாக, வலயக் கல்விப் பணிமனை சார்பாக குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதியால் இதன்போது பதிலளிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இந்த விடயத்தினைத் தெரியப்படுத்தி, பழைய ஆபத்தான பாடசாலைக் கட்டடத்தை அகற்றி புதிதாக அமைக்கவோ அல்லது சீரமைக்கவோ உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ரவிகரன் கூறினார்.
அத்தோடு பாடசாலைகளில் இவ்வாறான ஆபத்தான பழைய கட்டடங்கள் இருந்தால் அவை தொடர்பில் தமக்கு தெரியப்படுத்துமாறு, பிரதமர் ஹரிணி அமரசூரிய தம்மிடம் நாடாளுமன்றில் கேட்டுக்கொண்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எனவே இது தொடர்பான கோரிக்கைக் கடிதங்களை உரிய தரப்பினருக்கு அனுப்புவதுடன், அந்தக் கோரிக்கைக் கடிதங்களின் பிரதிகளைத் தமக்கும் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்ட ரவிகரன், தம்மாலும் இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு அழுத்தம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.