உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான கணினிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களை இணையவழியாக ஊடுருவி, பாரிய சைபர் குற்றப் பின்னணியில் (Cybercrime operation) செயற்பட்டு வந்த கனடாவின் ஒட்டாவா (Ottawa) நகரைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சர்வதேச கூட்டுப் பொலிஸ் நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேகப் பட்லர் (Jacob Butler) எனப்படும் இவ்விளைஞருக்கு எதிராகக் கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் தற்போது உத்தியோகபூர்வமாகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
‘கிம்வொல்ஃப்’ (Kimwolf) மற்றும் ‘அய்சுரு’ (Aisuru) ஆகிய கணினித் வைரஸ் வலைப்பின்னல்களை (Botnets) உருவாக்கி, அவற்றின் மூலம் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தகவல் கட்டமைப்பு (U.S. Department of Defense Information Network) உட்பட உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான சாதனங்கள் மற்றும் சர்வர்களை (Servers) சட்டவிரோதமாக ஊடுருவியதாக (Hacking) பட்லர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணப் பொலிஸாரின் (OPP) சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த புதன்கிழமை பட்லரைக் கைது செய்தனர். முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஒட்டாவாவில் உள்ள அவரது இல்லத்தைச் சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்த பல நவீன இலத்திரனியல் சாதனங்களைக் கைப்பற்றியிருந்தனர்.
அனுமதியின்றி கணினியைப் பயன்படுத்தியமை மற்றும் இணையவழி நாசகார வேலைகளில் (Cyber mischief) ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பட்லருக்கு எதிராகக் சுமத்தப்பட்டுள்ளன. அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒன்றாரியோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க நீதித் திணைக்களத்தினாலும் (DOJ) பட்லருக்கு எதிராகக் தனித்துவமாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கணினி ஊடுருவல்களுக்குத் துணையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமெரிக்காவில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச கூட்டுப் புலனாய்வு நடவடிக்கை:
கனடா பொலிஸாரின் விசாரணைக்கு இணையாக, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் இந்த ‘பாட்நெட்’ (Botnet) நிர்வாகிகளையும் அதன் உள்கட்டமைப்புகளையும் இலக்கு வைத்து சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை முன்னெடுத்திருந்தன.
அமெரிக்காவின் அலாஸ்கா அரசுத் சட்டத்தரணி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இணையத்துடன் இணைக்கப்பட்ட பல சாதனங்களை ஒன்றிணைத்து ஒரு வலைப்பின்னலாகச் செயற்படும் இந்த ‘பாட்நெட்டுகள்’, டிஜிட்டல் புகைப்பட சட்டங்கள் (Digital photo frames) மற்றும் இணைய கமராக்கள் (Web cameras) போன்ற அன்றாட தொழில்நுட்ப சாதனங்களை இலக்கு வைத்து முடக்கியுள்ளன. இவ்வாறு முடக்கப்பட்ட சாதனங்களின் கட்டுப்பாட்டு அதிகாரத்தை, பின்னர் இந்த ஹேக்கர்கள் (Hackers) ஏனைய சர்வதேச சைபர் குற்றவாளிகளுக்குப் பணத்திற்காக விற்பனை செய்துள்ளனர்.
பட்லரின் இணைய முகவரி (IP address), ஆன்லைன் கணக்கு விபரங்கள், பணப் பரிவர்த்தனை பதிவுகள் மற்றும் மெசேஜிங் செயலிகளின் உரையாடல்கள் ஆகியவற்றைக் சட்டப்பூர்வமாகப் பகுப்பாய்வு செய்ததன் மூலமே, அவர் ‘கிம்வொல்ஃப்’ பாட்நெட் வலைப்பின்னலின் முக்கிய நிர்வாகி என்பதைச் சர்வதேச சட்ட அமலாக்கப் பிரிவினர் கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது