தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (29) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு கடந்த தேர்தல்களில் தமிழ் மக்களும் வாக்களித்திருந்தனர். அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நம்பியே தமிழ் மக்கள் இந்த ஆதரவை வழங்கியிருந்தனர்.
மாகாண சபையின் அதிகாரங்களை பலவீனப்படுத்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாது என்பதே அவர்களின் பிரதான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது.
ஆனால், தற்போது முன்னெடுக்கப்படுகின்ற விடயங்கள் நாசுக்கான முறையில் மாகாண சபை அதிகாரங்களை பலவீனப்படுத்தும் திட்டத்தோடு அரங்கேற்றப்படுகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஒருவகையில் மக்களின் இந்த சந்தேகத்தில் உண்மையும் இருக்கின்றது.
மேலும் கடந்த கால வரலாற்றை திரும்பி பார்த்தல், பல முயற்சிகள் மத்திய அரசினால் முன்னெடுக்கப்படும் சூழல் உருவான போதெல்லாம், அன்று அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா தனது அரசியல் சாணக்கியத்தால் அவற்றை தடுத்து நிறுத்தி, மாகாண அரசின் ஊடாகவே அத்திட்டங்களை முன்னெடுக்க வழிவகை செய்திருந்தார்.
இன்று அவ்வாறானதொரு அரசியல் ஆளுமை தமிழ் தரப்பில் மத்தியில் இல்லாதுள்ளமையின் வெளிப்பாடே இந்நிலைமைக்குக் காரணம் என தெரிவித்தார்.