கிளிநொச்சி மாவட்டத்தின் மணல், கிரவல் அகழ்வு மற்றும் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல்
கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில்
மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
காலை 9.30மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வரவேற்புரை ஆற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த அனைவரையும்
வரவேற்று கருத்து தெரிவிக்கையில்……….
அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான மணலைப் பெற்றுக் கொள்வது மிகவும் சவாலான விடயமாக உள்ளதாகவும் குறிப்பாக சாதாரணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை விட மணலின் விலை அதிகரித்து காணப்படுவதால் ஒப்பந்தக்காரர்களிடமிருந்து மணலைப் பெற்றுக்கொள்வதில் தடங்கல்கள் ஏற்படுவதாகவும் அத்துடன் அயல் மாவட்டத்திற்கான மணல் தேவையை பூர்த்தி செய்வது பிரச்சினையாக உள்ளதாகவும் இதனால் அபிவிருத்திதிட்டங்களை விரைவுபடுத்த முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து மணல் ஒப்பந்தகாரர்களிடமிருந்து மணலை பெற்றுக் கொள்வது தொடர்பாக கடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய பிரதேச சபையின் ஊடாக மணல் யாட் அமைத்து அதனூடாக மணல் விநியோக தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய கரைச்சி பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட ஆற்றுப்பகுதியில் மணல் பெற்றுக்கொள்ளல், கனகராயன் ஆற்றுப்பகுதியில் படிந்துள்ள மணல் திட்டுக்களை அகழ்ந்து பொருத்தமான இடத்தில் களஞ்சியப்படுத்தல், மண் அகழ்ந்து இயந்திரத்தின் மூலம் கழுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் போது தோற்றம் பெறும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டத்தில் பல வீட்டுத்திட்ட மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால் மணல் விநியோகம் தொடர்பாக அனைத்து துறைசார்ந்த திணைக்கள தலைவர்களின் முன்மொழிவிற்கேற்ப எடுக்கப்பட்ட தீர்மானங்களை நெகிழ்வுத் தன்மையுடன் விரைவாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர்,பிரதம கணக்காளர்,
பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள்,கிளிநொச்சி மாவட்ட Clean srilanka திட்டத்தின் தலைவர்,பிரதேச சபை தலைவர்கள்,மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளர்,கௌரவ உறுப்பினர்கள், துறைசார் திணைக்கள தலைவர்கள் ,பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள்,
என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.