க்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பெத்லகேம் நகரில், பாலஸ்தீன சிறுவர்களின் கால்பந்து மைதானத்தை இடிக்கும் முடிவை இஸ்ரேல் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.
முறையான அனுமதி இன்றி இந்த மைதானம் கட்டப்பட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக இதை இடிக்க வேண்டியது அவசியம் என்றும் இஸ்ரேல் தெரிவித்தது.
இந்தநிலையில் இந்த மைதானத்தைக் காக்க ஒரு சர்வதேச பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்ட மனு, அதிகாரிகளைத் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வைத்ததாகத் தெரிகிறது.
இது எய்தா (Aida) அகதிகள் முகாம் அருகே, இஸ்ரேலின் பாதுகாப்புச் சுவருக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.
இந்த மைதானத்தில் பயிற்சி பெறும் 10 வயது சிறுமி நயா கூறுகையில், “எங்களுக்கு விளையாட வேறு இடம் இல்லை.
இது எங்கள் கனவுகளை உருவாக்கும் இடம். மைதானத்தை இடித்தால், எங்கள் கனவுகளையும் இடிப்பது போலாகும்” என்று கவலையுடன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இந்த மைதானம் சட்டவிரோதமானது என்ற அறிவிப்பு அதன் வாயிலில் ஒட்டப்பட்டது.அதைத் தொடர்ந்து டிசம்பர் இறுதியில் இடிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
தற்போது இந்த இடிப்பு நடவடிக்கை “தற்காலிகமாக” ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்தது. இருப்பினும், இது குறித்து தங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்று கால்பந்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன மக்கள் தரப்பில், “ஒரு சிறிய விளையாட்டு மைதானத்திற்கு அனுமதி மறுக்கும் இஸ்ரேல், சர்வதேச சட்டப்படி சட்டவிரோதமான பெரிய குடியேற்றங்களை மேற்குக் கரையில் அமைத்து வருகிறது” என்று குற்றம் சாட்டுகின்றனர்.