சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடை விதிக்கும் புதிய சட்டத்தைக் கொண்டு நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சிறுவர்கள் சிறுவர்களாகவே வளர்வதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். விளையாட்டுகள், நட்பு மற்றும் அன்றாட வாழ்க்கை முறையை ‘அல்காரிதம்களும்’ திரைகளும் ஆக்கிரமிப்பதைத் தடுக்க வேண்டும். சிறுவர்களின் டிஜிட்டல் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான நடவடிக்கை இது.”
பயனர்களின் வயதைச் சரிபார்க்கும் முழுப் பொறுப்பும் அந்தந்த சமூக ஊடக நிறுவனங்களையே சாரும்.
எந்தெந்த செயலிகள் தடை செய்யப்படும் என அரசு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டொக், ஸ்னாப்சாட், எக்ஸ் (X) போன்ற தளங்கள் இதில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் இதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு 16 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சமூக ஊடகத் தடை விதித்து அவுஸ்திரேலியா உலகிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது நோர்வே உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர ஆர்வம் காட்டி வருகின்றன.