தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 62 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 10.00 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட சமீபத்திய நிலைமை அறிக்கையின்படி, நான்கு மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகள் இந்த அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 62 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 203 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 17 பேர் தற்போது பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சீரற்ற காலநிலையால் 39 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய, இலங்கைக்கு அருகாமையில் நிலவும் குறைந்த அழுத்த மண்டலம் காரணமாகத் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
எனவே, பலத்த மழை, பலத்த காற்று மற்றும் இடி மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.