நீதிக்காக தமிழ் மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாகயிருப்பதாக தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கையின் பொறுப்புகளை நிலைநிறுத்துவதற்கு புதுப்பிக்கப்பட்ட உறுதியான அவசர நடவடிக்கை தேவை என குறிப்பிட்டுள்ளது
முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை முன்னிட்டு வெளியிட்டு;ள்ள அறிக்கையில் இதனை சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளதாவது



இலங்கை: உள்நாட்டு ஆயுத மோதல் முடிவுக்கு வந்து இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. போரின் போதும் அதன் இறுதிக்கட்டத்திலும் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றுவதற்கும், அவர்கள் அனுபவித்த பெரும் துயரங்களுக்கு சாட்சியாக விளங்குவதற்கும், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான தமிழ் தப்பிப்பிழைத்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும் முள்ளிவாய்க்காலில் கூடுகிறார்கள். இன்றைய நாளும் அதற்கு விதிவிலக்கல்ல.
மோதலின் போது சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாகக் கூறப்படும் நம்பகமான குற்றச்சாட்டுகளுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டியதன் தொடர்ச்சியான மற்றும் அவசரத் தேவையை இந்த நினைவேந்தல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளும் ஆவணப்படுத்தியுள்ளன.
உள்நாட்டு வழிமுறைகள் ஊடாக முழுமையான, நடுநிலையான மற்றும் நம்பகமான விசாரணைகளை உறுதி செய்வதற்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச அர்ப்பணிப்புகள் பலமுறை வழங்கப்பட்ட போதிலும், தற்போதைய நிர்வாகம் உட்பட அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இந்த கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறிவிட்டன. ஆழமாக வேரூன்றியுள்ள இந்த தண்டனையிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரம் (உரிமை மீறல்களுக்கு தண்டனை கிடைக்காமை), நீதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதிக்கான வாய்ப்புகளை சீர்குலைக்கிறது. அத்துடன், சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கையின் பொறுப்புகளை நிலைநிறுத்துவதற்கு புதுப்பிக்கப்பட்ட, உறுதியான அவசர நடவடிக்கை தேவை என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சமூகங்களுடனான கலந்துரையாடல்களில், நீண்டகால குறைபாடுகளுக்கு தீர்வு காண்பது மற்றும் கடந்தகால அத்துமீறல்களுக்கு பொறுப்புக்கூறுவது ஆகியவற்றின் அடிப்படையிலேயே அரசாங்கத்துடனான அர்த்தமுள்ள ஈடுபாடு அமையும் என்பதை தமிழ் சமூகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நீதிக்கான அவர்களின் போராட்டத்திற்கு சர்வதேச மன்னிப்புச் சபை (@amnesty) தனது ஒற்றுமையை வெளிப்படுத்தி அவர்களுடன் துணையாக நிற்கிறது.