சென்னை:
“உட்கட்சிச் சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது; கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா!” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடுமையான வார்த்தைகளுடன் விலகல் கடிதம் அனுப்பிவிட்டு, கட்சியின் மூத்த தலைவர் செம்மலை அதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக-வின் மிக முக்கியமான மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலை, அக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராகவும், சட்டசபை துணைச் சபாநாயகராகவும், கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியவர். தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து அதிமுகவில் எற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு இடையே, அவர் இன்று தனது பதவிகளையும், கட்சி உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்துள்ளார்.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ள உருக்கமான கடிதத்தில், “தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன வேதனையை உண்டாக்கிவிட்டன. இதே மனநிலையில் தான் லட்சக்கணக்கான தொண்டர்களும் இருக்கிறார்கள். நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை; மாறாகக் கவலை அளிப்பதாகவே உள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய, புரட்சித்தலைவி அம்மா காப்பாற்றிய இயக்கத்திற்கு இந்த கதியா? ‘கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா! நோகுதய்யா; மனசு நோகுதய்யா’ என்ற உள்மனதின் வெளிப்பாடு எல்லோருக்குமானது ஆகும். உட்கட்சிச் சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது என்று பிரபல ஆங்கில நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவிற்கு நிலைமை போய்விட்டது” என்று சாடியுள்ளார்.
மேலும், “அம்மா மறைவுக்குப் பிறகு எனக்குப் பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன, தடுக்கப்பட்டன. அதைப்பற்றிக் கூட நான் கவலைப்படாமல் தலைமைக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்றினேன். ஆனால், இப்போது உருவாகியுள்ள சூழ்நிலைகளைப் பார்க்கிற போது இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம் தரவில்லை. எனக்கு அரசியல் அங்கீகாரம் தந்த இருபெரும் தலைவர்களின் ஆன்மாக்களிடம் மன்னிப்புக் கோரி, கணத்த இதயத்தோடு கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். எஸ்பி வேலுமணி தரப்பின் பொதுக்குழு வியூகம், இபிஎஸ்ஸின் அவசர உத்தரவு என அதிமுக தத்தளித்து வரும் வேளையில், செம்மலையின் இந்த விலகல் எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த மற்றுமொரு பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.
#SemmalaiResigns #ADMK_Crisis #EdappadiPalaniswami #BreakingNews #May18 #TamilNaduPolitics #ADMK_Split #IntraPartyFeud #MGR_Legacy #JayalalithaaFollowers #PoliticalSensationTN #SemmalaiLetter #EPSvsVelumani #VijayAsCM #TVK_Government #ThalapathyVijay #SaveADMK #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`