கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின் போதே இந்த விபரம் வெளிவந்துள்ளது.
“கணேமுல்ல சஞ்சீவ” என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ரிவோல்வர் (Revolver) ரக துப்பாக்கியானது, “கம்பஹா ஒஸ்மண்ட்” என்று அழைக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகரவினால் வழங்கப்பட்டதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒஸ்மண்ட் குணசேகர அல்லது “கம்பஹா ஒஸ்மண்ட்”, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கடந்த மே 14 அன்று கம்பஹா, ஸ்ரீ போதி வீதிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கணேமுல்ல சஞ்சீவ, கடந்த 2025 பிப்ரவரி 19 அன்று சிறைக்காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, கொழும்பு அளுத்கடை (Hulfsdorp) நீதவான் நீதிமன்ற வளாகத்தின் 5ஆம் இலக்க நீதிமன்ற அறையினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
வெளிநாடுகளில் இயங்கி வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் (Organized criminals) இணைந்து இக்கொலையைத் திட்டமிட்டமை மற்றும் சதி செய்தமை, அத்துடன் இக்குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வழங்கி கொலைக்கு உதவியமை மற்றும் தூண்டியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ஒஸ்மண்ட் குணசேகர கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து உரிமம் இல்லாத, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் (Repeater) ரக துப்பாக்கி ஒன்று, 10 தோட்டாக்கள் மற்றும் இரண்டு மெகசீன்கள் (Magazines) காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்தேக நபர் தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் (Detention orders) கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்