தென்னிலங்கையில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்களை ஏமாற்றி, அவர்களின் அட்டைகளிலிருந்து மோசடியாக பணம் பெற்ற நபரை கைது செய்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெபிதிகொல்லேவவைச் சேர்ந்த 39 வயதுடைய இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து முதியவர்களுக்கு பணம் எடுக்க உதவியதாக கூறப்படும் சந்தேக நபர், அவர்களின் அட்டைகளை எடுத்து அவர்களின் கடவுச்சொற்களைக் கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தன்னிடம் இருந்த அதே அட்டையுடன் கவனமாக அட்டையை மாற்றி, பின்னர் இயந்திரத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதாக முதியவர்களிடம் கூறி, பின்னர் அந்த அட்டைகளிலிருந்து பணம் எடுப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மோசடி தொடர்பில் தெற்கு களுத்துறை, வாதுவ மற்றும் பண்டாரகம பொலிஸ் நிலையங்களில் ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
வங்கிகளில் உள்ள பாதுகாப்பு கேமராக்களை கண்காணித்து, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் கெபிதிகொல்லேவ பகுதியில் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.