ஊர்காவற்றுறை – காரைநகர் இடையே சேவையில் ஈடுபட்டுள்ள பயணிகள் பாதையின் அடிச்சட்டம் பல இடங்களில் வெடித்து சேதமடைந்துள்ளதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை பாதையில் ஏற்றி இறக்குவதில் சிக்கல்கள் ஏற்படுவதுடன், பயணிகளின் கால்களில் காயம் ஏற்படும் அபாயமும் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பாதையை நாள்தோறும் அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், நீண்டகாலமாக இந்நிலை தொடர்வதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, சேதமடைந்துள்ள பகுதிகளை உடனடியாக சீரமைத்து, பாதுகாப்பான மற்றும் இடையூறற்ற சேவையை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.