சமூக ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் வணிகச் சூழலுக்கு ஆதரவளிக்கவும் அரசாங்கம் எடுத்துள்ள நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் சி சென்ஹொங் (Qi Zhenhong) வரவேற்றுள்ளார். எனினும், இலங்கையின் தற்போதைய வணிகச் சூழல் இன்னும் சர்வதேச எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார மீட்சியில் அரசாங்கம் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளதுடன், சமூக ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், வணிகச் சூழலை மேம்படுத்துவதற்கும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் பல்வேறு நடைமுறை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சீனத் தூதுவர் தெரிவித்தார்.
“இருப்பினும், நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் கொள்கை தொடர்ச்சி போன்ற அம்சங்களில் இலங்கையின் தற்போதைய வணிகச் சூழல் இன்னும் சர்வதேச எதிர்பார்ப்புகளை விடக் குறைவாகவே உள்ளது,” என்று ‘ அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் இதில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
உலகளாவிய கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும், 2025 ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு நேரடி முதலீடு 174.38 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சாதனை படைத்துள்ளது. குறிப்பாக ‘மண்டலம் மற்றும் பாதை’ (Belt and Road) திட்ட பங்காள நாடுகளிடையே இது வேகமாக வளர்ந்து வருகிறது. அத்தகைய முதலீடுகளை ஈர்ப்பதற்கு இலங்கை சிறந்த நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
“கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டம் ஆகிய இரண்டு முக்கிய திட்டங்களும் சீன நிறுவனங்களுக்கு இலங்கை மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளன,” என அவர் மேலும் கூறினார். சீனா மற்றும் இலங்கை மத்திய வங்கிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், சீன நிறுவனங்களுக்கான செலவுகளைக் குறைக்கவும், அந்நியச் செலாவணி அபாயங்களைக் கட்டுப்படுத்தவும் உதவியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக உலகளாவிய மூலதன ஒதுக்கீடு மாறிவரும் நிலையில், இந்தியப் பெருங்கடலில் ஒரு பிராந்திய நிதி மற்றும் முதலீட்டு மையமாக இலங்கை உருவெடுக்க தனித்துவமான வாய்ப்பு உள்ளதாக அவர் கருத்து தெரிவித்தார். அத்துடன், உள்கட்டமைப்பு மற்றும் நிதி ஆதரவை மேம்படுத்தவும், கொழும்பு துறைமுக நகர் சட்டங்களை முழுமையாக அமல்படுத்தவும் அவர் வலியுறுத்தினார். ஒன்லைன் சூதாட்டம் மற்றும் தொலைத்தொடர்பு மோசடிகள் போன்ற சட்டவிரோத செயல்கள் இடைவெளிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க கடுமையான கண்காணிப்பு தேவை என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்கா அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த தூதுவர், அபிவிருத்தி என்பது சில நாடுகளின் சலுகை அல்ல, அது அனைத்து நாடுகளின் உலகளாவிய உரிமை என்று கூறினார். வர்த்தக அல்லது வரி யுத்தங்களில் எவரும் வெற்றியாளர்கள் இல்லை என்றும், பாதுகாப்புவாதம் (protectionism) எதற்கும் தீர்வு தராது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.