சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த இரு இளைஞர்கள், ‘ஹேஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருளுடன் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸார் கடந்த புதன்கிழமை (4) மாலை மவுஸ்சாகலை நீர்த்தேக்கப் பகுதியில் விசேட வீதித் தடையை ஏற்படுத்தி, யாத்ரீகர்களின் வாகனங்களைச் சோதனையிட்டனர். இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த இரு இளைஞர்களிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
சந்தேகநபர்கள் மாத்தளை, உக்குவலை பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள். இவர்களிடமிருந்து தலா 15 – 20 மில்லி கிராம் எடையுள்ள ‘ஹேஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று (5) மாலை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் என்பதால், யாத்திரிகர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கடத்தி வருபவர்களைக் கண்டறிய மஸ்கெலியா பொலிஸார் தொடர்ச்சியான சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.