ஹட்டன் பகுதியில் மாணவர்கள் குழுவாக மற்றொரு மாணவரை தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்ப விசாரணைகளின் படி, இந்த சம்பவம் சுமார் 21 நாட்களுக்கு முன்பு, மார்ச் மாத தொடக்கத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாணவன் மற்றொரு மாணவன் புகைபிடித்ததை ஆசிரியரிடம் தெரிவித்ததுதான் இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மாணவன், மேலும் இரு மாணவர்களுடன் சேர்ந்து அந்த மாணவரை தாக்கியதாக பொலிஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
சம்பவம் நடந்த உடன், பள்ளி அதிபர் தலையிட்டு இரு தரப்பினரையும் சமரசம் செய்ய முயன்றதால் ஆரம்பத்தில் எந்த முறையீடும் செய்யப்படவில்லை.
ஆனால், தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதும், பாதிக்கப்பட்ட மாணவரும் அவரது தாயாரும் மார்ச் 28ஆம் திகதி பொலிஸில் முறையீடு செய்துள்ளனர்.
காயமடைந்த மாணவர் நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் (JMO) பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மற்றும் வீடியோ வெளியீடு தொடர்பாக மூன்று மாணவர்களிடமிருந்து பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
குற்றச்சாட்டுக்குட்பட்ட மூன்று மாணவர்களும் 16 வயதுடையவர்கள் என்றும், ஹட்டன் மற்றும் டிக்கோயா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.