தென் கொரியாவின் முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ஹன்வா ஏரோஸ்பேஸ்’ தொழிற்சாலையின் ஏவுகணை எரிபொருள் உற்பத்திப் பிரிவில் இன்று திங்கட்கிழமை (01) ஏற்பட்ட பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்தில் சிக்கி ஐந்து ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
தென் கொரியாவின் டேஜியோன் நகரில் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்தத் திடீர் விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்து அந்நாட்டு சுகாதார மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் விடுத்துள்ள விசேட செய்திக்குறிப்பில்,
வெடிப்புச் சம்பவத்தின் வீரியம் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் மிக மோசமாகச் சிதைவடைந்துள்ளதால், பலியானவர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த ஐந்து பேரில் இருவர் 20 வயதுடைய தற்காலிக ஊழியர்கள் என்பதுடன், அனைவரும் ஹன்வா நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆவர்.
விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த இருவரில் ஒருவர் மிகக் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இவர்கள் இருவரும் வெடிப்பு நிகழ்ந்த உடனே தொழிற்சாலையிலிருந்து தாங்களாகவே தப்பியோடி உயிர் பிழைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் ஏவுகணை எரிபொருளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளிலிருந்து வெடிபொருட்களை அகற்றுவதற்காக, தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போதே இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், தீ விபத்தை ஏற்படுத்திய இந்த வெடிப்பின் உண்மையான காரணம் குறித்து தீயணைப்புப் பிரிவினர் மற்றும் நிபுணர் குழுவினர் தொடர்ந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்து நடந்த ஹன்வா ஏரோஸ்பேஸ் தொழிற்சாலையானது பெரிய ரக உந்துவிசை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் மற்றும் ஏவுகணை எரிபொருள்களைக் கையாளும் மிக முக்கிய இராணுவத் தளமாகும். இதன் காரணமாக, நாட்டின் தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் இத்தொழிற்சாலையின் உள் வரைபடத்தை அணுக அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் சற்றுத் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, விபத்து குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் விபத்தை எதிர்கொள்ளவும், அதன் பின்னணியை ஆராயவும் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் திரட்டுமாறு அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மறுபுறம், விபத்து குறித்துப் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ள நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சோன் ஜே-இல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும், விசாரணை அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்துச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சர்வதேச பங்குச் சந்தையில் ஹன்வா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.8% ஆலும், அதன் தாய் நிறுவனமான ஹன்வா கோர்ப் நிறுவனத்தின் பங்குகள் 3.4% ஆலும் மதிய வர்த்தகத்தில் திடீர் வீழ்ச்சியைக் கண்டுள்ளன.