ஐபிஎல் தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றாகவும் இலங்கை அணி முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார பயிற்றுவிப்பாளராக செயற்படும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியின் பெரும்பான்மை பங்குகளை, உலகப்புகழ் பெற்ற தொழிலதிபர் லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் தலைமையிலான குழுமம் வாங்கியுள்ளது.
சுமார் 1.65 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் சுமார் 15,600 கோடி ரூபாய்) மதிப்பீட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
முன்னதாக கல் சோமானி தலைமையிலான குழுமத்துடன் பேசப்பட்ட ஒப்பந்தம் தோல்வியடைந்த நிலையில், தற்போது லக்ஷ்மி மிட்டல், அவரது மகன் ஆதித்யா மிட்டல் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் ஆதார் பூனாவாலா ஆகியோர் இணைந்து இந்த அணியைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 75 சதவீத பங்குகளை மிட்டல் குடும்பத்தினர் வைத்திருப்பார்கள்.
ஆதார் பூனாவாலா சுமார் 18 சதவீத பங்குகளையும், மீதமுள்ள பங்குகளை மனோஜ் படாலே தலைமையிலான பழைய முதலீட்டாளர்களும் வைத்திருப்பார்கள்.
ஐபிஎல் விதிமுறைகளின்படி ஏலத் தொகை மற்றும் வீரர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், மிட்டல் போன்ற பெரும் தொழிலதிபர்களின் வருகை அணியின் எதிர்காலத் தொலைநோக்கு பார்வை மற்றும் நிர்வாகத் திறனில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்ஷ்மி மிட்டலைப் பொறுத்தவரை, அவர் எஃகு உலகின் மன்னர் என்று அழைக்கப்படுபவர். 1950-ல் ராஜஸ்தானின் சாதுல்பூரில் பிறந்த இவர், கொல்கத்தாவில் வளர்ந்தவர்.
ஆர்செலர் மிட்டல் (ArcelorMittal) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் இவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாயாகும்.
செயின்ட் சேவியர் கல்லூரியில் படிக்கும் போதே கடின உழைப்பாளியாகவும், ரிஸ்க் எடுக்கத் தயங்காதவராகவும் அறியப்பட்டவர்.
மார்வாரி கலாச்சாரம் மற்றும் உணவுகளின் மீது மிகுந்த பற்று கொண்ட இவர், தற்போது தனது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உரிமையாளராக மாறியிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.