மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய போர் சூழல் தொடர்பாக ரஷ்யாவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்துள்ளது.
இதேவேளை, வளைகுடா நாடுகள் மீது ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்து ஐநா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 13 வாக்குகள் கிடைத்துள்ளன.
சுமார் 135 நாடுகளின் இணை அனுசரணையுடன் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. எனினும், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்ந்து கொண்டுள்ளன.
ஜோர்தான் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்து வரும் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்துமாறு இந்தத் தீர்மானத்தின் ஊடாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்கள் குறித்துப் பேசும் இந்தத் தீர்மானத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் குறித்து எவ்வித குறிப்புகளும் உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.