அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘சமரசங்களுக்கு’ உள்ளானதாக, பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள பதிவு இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
தனது X பதிவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்:
“மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்?” என அவர் வினவியுள்ளார்.
தனக்குத் தெரிந்த அமெரிக்க நண்பர்கள் மற்றும் வட்டாரங்கள் மூலம், வர்த்தக ஒப்பந்தத்தில் மோடி அமெரிக்காவிடம் அடிபணிந்து சமரசம் செய்து கொண்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சமரசம் குறித்த உண்மையான தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் முழுமையாகத் தெரியவந்தால், மோடி தனது பிரதமர் பதவியையே இராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என சுவாமி எச்சரித்துள்ளார்.
ஏற்கெனவே இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவரே இப்படிப் பதிவிட்டது விவாதத்தை இன்னும் தீவிரமாக்கியுள்ளது.