இலங்கை தனது மன்னார் வளைகுடாப் பகுதியில் உள்ள சுமார் 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவை பெட்ரோலிய ஆய்வுகளுக்காகச் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டுள்ளது. நாட்டின் பயன்படுத்தப்படாத பயன்பாட்டிற்கு வராத எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் குறித்த புதிய எதிர்பார்ப்புகளை இது ஏற்படுத்தியுள்ளது.
‘2026 இலங்கை பெட்ரோலிய ஆய்வு உரிமம் வழங்கும் சுழற்சி’ (2026 Sri Lanka Petroleum Exploration Licence Awarding Round) இன்று உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டதன் மூலம், மன்னார் வளைகுடாவில் உள்ள நான்கு ஆய்வுத் தொகுதிகள் (Exploration Blocks) சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
தற்போதுள்ள புவியியல் தரவுகளின் அடிப்படையில், மன்னார் வளைகுடாவில் சுமார் 2 பில்லியன் பீப்பாய்கள் பெட்ரோலியம் மற்றும் 9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு இருக்கக்கூடும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு தெமட்டகொடையில் உள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைமையக கேட்போர் கூடத்தில், எரிசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
மன்னார் வளைகுடாவில் இயற்கை எரிவாயு மற்றும் திரவ ஹைட்ரோகார்பன்கள் இருப்பது முந்தைய ஆய்வுகளின் போதே உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பெட்ரோலிய மேம்பாட்டு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நீல் டி சில்வா தெரிவித்தார். இருப்பினும், இதுவரை மன்னார் வளைகுடாவின் மிகக் குறைந்த பரப்பளவிலேயே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன என்றும், நவீன புவியியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இன்னும் பரந்த அளவிலான பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இப்புதிய ஆய்வுச் சுழற்சியில் பங்குபெறும் சர்வதேச நிறுவனங்களுக்கு, பெட்ரோலிய மேம்பாட்டு அதிகார சபையிடம் தற்போதுள்ள மன்னார் வளைகுடா குறித்த புவியியல் தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் செய்து தரப்படும்.
தனது ஆற்றல் தேவைகளுக்குப் பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியத்தையே வரலாற்று ரீதியாக நம்பியிருக்கும் இலங்கைக்கு, இந்த மதிப்பீடு செய்யப்பட்ட வளங்கள் மிக முக்கியமானதாக அமையக்கூடும். எனினும், இதன் உண்மையான அளவும் வர்த்தக ரீதியிலான பயன்பாடும் அடுத்தகட்ட ஆய்வுகள் மற்றும் வெற்றிகரமான அகழ்வாராய்ச்சிகளிலேயே தங்கியுள்ளன.