மத்திய கிழக்கு மோதல்களில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடையே நிரந்தரப் போர்நிறுத்தம் மற்றும் நீடித்த பேச்சுவார்த்தை அவசியம் என சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து முன்மொழிந்துள்ள புதிய ஐந்து அம்சத் திட்டத்தை சுட்டிக்காட்டி, இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் சி சென்ஹொங் (Qi Zhenhong) இதனைத் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்த முன்முயற்சியானது, ‘போர்நிறுத்தம்’ (Ceasefire), ‘பேச்சுவார்த்தை’ (Talk), மற்றும் ‘உறுதிப்படுத்துதல்’ (Ensure) ஆகிய மூன்று முக்கியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்று தூதுவர் குறிப்பிட்டார். இந்தத் தூண்களே பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான அமைதிக்கு வழிகாட்டும் என அவர் கூறினார்.
மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தூதுவர் சி, “போர்நிறுத்தம் என்பது ஒரு நல்ல ஆரம்பம்” என்றார். இருப்பினும், இத்தகைய முயற்சிகள் தற்காலிக ஏற்பாடுகளுக்கு அப்பால் செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
குறுகிய காலப் போர்நிறுத்தங்களில் இருந்து விலகி, நிரந்தரப் போர்நிறுத்தத்தை நோக்கி நகருமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
போர்நிறுத்த ஒப்பந்தங்கள் என்பது வெறும் தற்காலிக இடைவேளைகளாக மட்டும் இருக்காமல், அவை நீண்டகால ஸ்திரத்தன்மைக்கான அடித்தளமாக அமைய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களது வாக்குறுதிகளைக் காப்பாற்றுவார்கள் என்று சீனா நம்புவதாகவும் தூதுவர் சி சென்ஹொங் மேலும் தெரிவித்தார்.