யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதிக்குச் சுற்றுலா சென்றவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மணற்காடு பகுதிக்குச் சுற்றுலா சென்ற ஒரு குழுவினருக்கும், அங்கு சிவில் உடையில் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்த பொலிஸ் குழுவிற்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தர்க்கம் பின்னர் கைக்கலப்பாக மாறியது. இதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த மூவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் மற்றும் அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
மதுபோதையில் இருந்த பொலிஸாரே இந்தத் தாக்குதலை முன்னெடுத்ததாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தனித்தனியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.