ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக, விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், ஏர் இந்தியா நிறுவனம் விமானக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களின் பயணிகள் கட்டணம் 3 கட்டமாக அதிகரிக்கப்படுகிறது.
அதன்படி, முதல் கட்டமாக இன்று அதிகாலை முதல் உள்நாடு மற்றும் சார்க் நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான் செல்லும் சர்வதேச விமானங்களுக்கு 399 இந்திய ரூபா கட்டணம் உயர்த்தப்படுகிறது.
மேற்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு 10 அமெரிக்க டொலர், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 20 டொலர், ஆபிரிக்க நாடுகளுக்கு, 30 டொலர் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு எரிபொருள் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. இனிமேல் அந்த கட்டணம் வசூலிக்கப்படும்.
2 ஆம் கட்ட கட்டண உயர்வு 18 திகதி அதிகாலை முதல் அமுலாகும். ஐரோப்பிய நாடுகளுக்கு 25 டொலர், வட அமெரிக்காவுக்கு, 50 டொலர், அவுஸ்திரேலியாவுக்கு 50 டொலர் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆம் கட்டமாக, ஜப்பான், ஹாங்கொங், தென்கொரியா செல்லும் ஏர் இந்தியா விமானங்களுக்கான கட்டண உயர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.