புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து தற்போதைய அரசாங்கம் எவ்வளவு நிதியைப் பெற்றுள்ளது என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வெளிப்படையான விளக்கமொன்றை வழங்க வேண்டும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனசெத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். எனவே அவர் நாட்டு மக்களுக்கு சில முக்கிய விடயங்களை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து தற்போதைய அரசாங்கம் எத்தனை மில்லியன் டொலர்கள் அல்லது பில்லியன் டொலர்கள் நிதியுதவி பெற்றுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
புலம்பெயர் அமைப்புகள் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக எந்தளவிற்கு நிதி உதவிகளை வழங்கின என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இன்று புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து ஒரு சதமும் கிடைக்காது என கூறப்படுகின்றது. அவ்வாறெனில் இதற்கு முன்னர் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிதி எங்கே சென்றது என்பதையும் மக்கள் அறிய விரும்புகின்றனர்.
அந்த நிதி எந்த நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது, யாருக்கு வழங்கப்பட்டது, எந்த நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டது என்பன தொடர்பில் தெளிவான பதில்கள் வழங்கப்பட வேண்டும்.
இந்த நாட்டை பலவீனப்படுத்துவதற்கும் தேசிய அடையாளத்தை சிதைப்பதற்கும் சில சக்திகள் முயற்சித்து வருகின்றன என்ற சந்தேகம் மக்களிடையே காணப்படுகின்றது.
குறிப்பாக புத்தசாசனத்தை பலவீனப்படுத்தவும், நாட்டின் பாரம்பரிய மத மற்றும் கலாசார அடித்தளங்களை சீர்குலைக்கவும் சில தரப்புகள் திட்டமிட்டு செயற்படுகின்றன என்ற அச்சம் எழுந்துள்ளது.
புலம்பெயர் அமைப்புகளுக்கு இவ்வளவு பெரியளவில் நிதி எங்கிருந்து கிடைக்கின்றது என்பதையும் ஆராய வேண்டிய அவசியம் உள்ளது. அந்த நிதி எந்த நோக்கத்துக்காக சேகரிக்கப்படுகின்றது, யாருடைய நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகின்றது என்பதும் மக்களுக்கு தெரியவர வேண்டும்.
நாங்கள் எந்தவொரு புலம்பெயர் அமைப்பிற்கும் தேவையான வகையில் இந்த நாட்டை நடத்த அனுமதிக்கப் போவதில்லை. நாட்டின் இறையாண்மை, தேசிய ஒற்றுமை மற்றும் புத்தசாசனத்தை பாதுகாப்பதற்காக எப்போதும் குரல் கொடுப்போம்.
இந்த நாட்டை வெளிநாட்டு தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க முயற்சிப்பவர்களுக்கும், அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கும் எதிராக ஜனநாயக ரீதியில் போராடுவோம்.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உண்மையில் நேர்மையான நிலைப்பாட்டைக் கொண்டவராக இருந்தால், புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்துக்கிடையிலான தொடர்புகள் தொடர்பில் முழுமையான தகவல்களை நாட்டுக்கு வெளியிட வேண்டும். மக்களிடம் கேள்விகளை எழுப்புவதற்கு முன்னர் அவர் அவற்றுக்கான பதில்களையும் வழங்க வேண்டும்