ஜெனீவாவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சுமித் தசநாயக்க, வத்திக்கான் – அப்போஸ்தலிக் அரண்மனையில் பாப்பரசர் 14ஆம் லியோவிடம் தனது சான்றாதாரப் பத்திரங்களைச் சமர்ப்பித்துள்ளார்.
அதற்கமைய, அவர் ஜெனீவாவில் வசித்தவாறே வத்திக்கானுக்கானஇலங்கையின் அடுத்த தூதுவராகவும் பணியாற்றவுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற இந்த சான்றாதாரப் பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய பாப்பரசர் 14ஆம் லியோ, “தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு நிபந்தனையாக ஆயுதங்கள் மூலம் அமைதியைத் தேட முயற்சிக்கும் இவ்வாறானதொரு காலகட்டத்தில், இருதரப்பு, பிராந்திய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட அனைத்து மட்டங்களிலும் கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதோடு, இணக்கப்பாடுகளைத் தேடும் இராஜதந்திரத்தை நோக்கி மீண்டும் திரும்புவதற்கான அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
தூதுவர்களின் சேவை, அந்தந்த நாடுகளுக்கும் வத்திக்கானுக்கும் இடையே நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் ஒரு முக்கிய பாலமாகும் என்றும் பாப்பரசர் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நமது கூட்டு முயற்சிகள் இருதரப்பு மற்றும் பன்முக உறவுகளுக்குப் புதிய உயிர் கொடுக்க பங்களிப்பதுடன், நமது சமூகங்களில் ஓரங்கட்டப்பட்ட மற்றும் மறக்கப்பட்ட மக்கள் மீது கவனம் செலுத்தவும் உதவும். இதன் மூலம் மிகவும் நியாயமான, சகோதரத்துவம்மிக்க மற்றும் அமைதியான உலகிற்கு வலுவான அடித்தளமிடுவதற்கு நாம் இணைந்து பணியாற்ற முடியும் என்றார்.
இதன்போது, தூதுவர் சுமித் தசநாயக்க, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் வாழ்த்துகளை பாப்பரசரிடம் சமர்ப்பித்ததுடன், இலங்கைக்காகவும்; மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டார். இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையே நிலவும் நீண்டகால நட்பு உறவுகளை நினைவு கூர்ந்த தூதுவர் சுமித் தசநாயக்க, 2027 ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் பாப்பரசர் 14ஆம் லியோவுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ள அழைப்பையும் மீண்டும் நினைவுபடுத்தினார்.
இந்த சான்றாதாரப் பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வுக்கு இணையாக, தூதுவர் சுமித் தசநாயக்க, வத்திக்கான் இராஜங்கச் செயலாளர் கர்தினால் பீட்டர் பரோலினையும் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.
அத்துடன், இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக 2025 நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த, அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகரையும் தூதுவர் சந்தித்தார்.
இதன்போது, பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் தனது இலங்கை விஜயம், அதன் முக்கியத்துவம் மற்றும் இலங்கையிலிருந்து தமக்குக் கிடைத்த விருந்தோம்பல் என்பனவற்றை பாராட்டி நினைவு கூர்ந்தார்.
தூதுவர் சுமித் தசநாயக்கவுடன் இணைந்து சர்வதேச நாடுகளான சியெரா லியோன், பங்களாதேஷ், யேமன், ருவாண்டா, நமீபியா, மொரிஷியஸ் மற்றும் சாட் ஆகிய நாடுகளின் வதிவிடமற்ற தூதுவர்களும் அன்றைய தினமே பாப்பரசர் 14ஆம் லியோவிடம் தங்களது சான்றாதாரப் பத்திரங்களைச் சமர்ப்பித்தனர்.