பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில், தமிழ் மக்களின் சொந்த காணிகளை இராணுவம் சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக இன்று ஜனநாயக ரீதியான போராட்டம் நடைபெறுகிறது.
இராணுவத்தினர் வசம் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைப்போம் என தெரிவித்து தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று தமிழ்; மக்களின் உறுதி காணிகளை இராணுவத்தினருக்கு நிரந்தர முகாமை அமைப்பதற்காக கையகப்படுத்த முயல்கின்றது என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் உண்மை முகத்தை புரிந்துகொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
இன்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவேளை இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது.
பச்சிளைப்பள்ளி பிரதேச செயலளார் பிரிவிற்கு உட்பட்ட முகாவில் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து நிலைகொண்டிருக்கின்ற ஸ்ரீலங்கா ஆயுதப்படைகளுக்கு தமிழ் மக்களின் உறுதி காணிகளை அவர்களின் விருப்பங்களுக்கு மாறாக சுவீகரித்து அந்த படையினருக்காக வழங்குவதற்கு என இன்றைய தினம் அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்தன.
இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் காணி உரிமையாளர்களும் பொதுமக்களும் மததலைவர்களும் ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்களும் வெளியிட்ட எதிர்ப்பின் காரணமாக இந்த அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சிமாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் அறிவுறுத்தல் நில அளவை திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இங்கே நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையிலே இந்த நில அளவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலே இந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுகின்றது.
இந்த அளவீட்டு செயற்பாடுகளை முயற்சிகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுரகுமார திசநாயக்க பதவிக்கு வருகின்ற போது தாங்கள் மக்களின் காணிகளை மக்களிடம் கையளிப்போம் மக்களின் காணிகளில் இராணுவத்தினருக்கு வேலை இல்லை என தெரிவித்து எங்களை முழுமையாக நம்பவைத்து தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளை பெற்றுதான் அவர்கள் பதவி வந்தார்கள்.
அவர்கள் பதவிக்கு வந்த பின்னர் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சிறீதரனும் மிக தெளிவாக இந்த காணிகள் மக்களிடம் கையளிக்கப்படவேண்டும், இராணுவமுகாம் அகற்றப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியிருந்த போது அது தீர்மானமாக உள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியினர் இ;வ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பது அவர்களின் முகங்களை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.
இன்று இந்த போராட்டம் இடம்பெறவில்லை என்றால் இங்கு நிலஅளவீடு இடம்பெற்று பல ஏக்கர் காணிகள் எங்களை அழித்த இராணுவத்தினர் நிரந்தரமாக தங்குவதற்கான ஒரு முகாமாக மாற்றப்பட்டிருக்கும்.