வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனம் செய்வதில் பல்வேறான இடர்பாடுகளும் முறைகேடுகளும் இடம்பெறுவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரனுக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து குறித்த இடத்துக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் நிலைமைகளை ஆராய்ந்து இருந்தார்.
இந்நிலையில் குறித்த களஞ்சியசாலையின் முகாமையாளரின் செயற்பாடுகள் விவசாயிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் முறையற்ற விதத்தில் ஒரு திட்டமிடப்படாத வகையிலும் விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்வது மற்றும் நீண்ட நாட்கள் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றமை இடைத்தரகர்களான வர்த்தகர்கள் நெல் ஆலை உரிமையாளர்கள் நெல்லை குறித்த களஞ்சிய சாலைக்கு வழங்குவது தொடர்பிலும் விவசாயிகளால் முறையிடப்பட்ட நிலையில் அவை தொடர்பிலும் கவனமெடுத்து பார்வையிட்டிருந்தார்.
இதனை அடுத்து மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குறித்த இடத்துக்கு வருகை தந்ததோடு கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கமும் அங்கு வருகை தந்திருந்தார்.
இதன்போது உபாலி சமரசிங்க குறித்த களஞ்சியசாலையின் முகாமையாளருக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்ததோடு விவசாயிகளின் நலன் கருதி செயல்பட வேண்டும் எனவும் மக்களுக்கான அரசாங்கத்தில் மக்களுக்கான செயற்பாடுகளே முன்னுரிமை படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை விவசாயிகளுடைய நெல்லை கால தாமதமாக்கியும் வர்த்தகர்களுடைய நெல்லை களஞ்சியப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில் குறித்த களஞ்சிய சாலையில் இடப்பெற்ற இடப்பற்றாக்குறை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வவுனியாவில் மேலும் களஞ்சிய சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரனால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் பிரகாரம் வவுனியா நகர் பகுதியை அண்டி 2 களஞ்சியசாலைகளும் மடுக்கந்தை பகுதியில் ஒரு களஞ்சியசாலையுமாக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டு ஒழுங்குகளை செய்திருந்தனர்.
இதேவேளை தொடர்ந்தும் விவசாயிகளுடைய நெல்லை கொள்வனவு செய்வதில் காலதாமதமும் அசண்டையீனமும் காணப்படுமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயிகள் அவ்வாறான நிலைமைகளுக்கு முகம் கொடுத்தால் முறைப்பாடு செய்யுமாறும் பிரதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.