நுரைச்சோலைக்கு தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் நாட்டில் மின்னுற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பாரிய நஷ்டமும் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
வியாழக்கிழமை (2) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இறுதியாக நாட்டை வந்தடைந்த 13ஆவது கப்பலில் கொண்டு வரப்பட்ட நிலக்கரி தொகையே தற்போது நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு வழமையை விடக் குறைந்தளவிலேயே காணப்படுகிறது. தரம் குறைந்த நிலக்கரியால் மூன்றில் இரண்டு பங்கு மின்னுற்பத்தி மாத்திரமே இடம்பெறுகிறது.
இது இவ்வாறிருக்க மறுபுறத்தில் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் சடுதியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 15 – 20 சதவீத மின்னுற்பத்தியே நீர்த்தேக்கங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது எரிபொருட்களும் எமக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. இதனால் மசகு எண்ணெய்க்கு பதிலாக டீசலைப் பயன்படுத்தியே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தரம் குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதால் நாட்டுக்கு பல்வேற துறைகளிலும் இவ்வாறு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி கடந்த சில நாட்களாக நுரைச்சோலையிலேயே தங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அங்கிருந்து கொண்டு அதிகாரிகளுக்கு சிறப்புரிமைகளையும் சலுகைகளையும் வழங்கி இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு அவர் முயற்சிக்கின்றார். விரைவில் இலங்கை மின்சாரசபையின் தலைவரும் ஓய்வு பெறவுள்ளார். அதன் பின்னர் குமார ஜயக்கொடி தனக்கு நெருக்கமான ஒருவரையே அப்பதவிக்கு நியமிப்பார்.
இந்த ஊழல்வாதியான அமைச்சரவை உடனடியாக பதவி நீக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ள போதிலும், அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. எனவே நாம் நம்பிக்கையில்லா பிரேரணையையும் சமர்ப்பித்திருக்கின்றோம். ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையா அல்லது டில்வின் சில்வா தலைமையிலான பெலவத்தை அலுவலகமா இந்த மோசடிகளுடன் தொடர்புபட்டுள்ளது என்பதும் தெரியாமலுள்ளது.
விலை அதிகரிப்பை தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் எரிபொருள் பாவனையைக் குறைத்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சாரப்பாவனை குறைவது சிறந்ததல்ல. அது நாட்டின் அபிவிருத்திக்கு சிறந்ததல்ல என்றார்.