நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே அமைந்துள்ளன என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
தேசிய நுகர்வோர் முன்னணி காரியாலயத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்;
கடந்த காலங்களில் மக்கள் எரிவாயுவுக்காக நீண்ட வரிசைகளில் நின்றனர். புதிதாகத் திருமணம் செய்யும் தம்பதியினர் கூட ஒரு எரிவாயு சிலிண்டரைப் பெற்றுக்கொள்ள அடகுக்கடைக்குச் செல்லும் நிலையே காணப்பட்டது. தற்போது ஜனாதிபதி ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விடுவிப்பதாகக் கூறுகிறார். இதனை நாம் வரவேற்கிறோம் ஆனால் இந்த முடிவை அவர் முன்னரே எடுத்திருக்க வேண்டும்.
அதேநேரம், தற்போது சந்தைக்கு வரும் சிலிண்டர்களில் எரிவாயுவின் அளவு குறைவாக இருப்பதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனை உறுதிப்படுத்த நாம் வரும் நாட்களில் தராசுகளைப் பயன்படுத்தி சிலிண்டர்களின் வெற்று எடை மற்றும் எரிவாயுவின் எடையை அளவிட்டு நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக நிரூபிப்போம். லாஃப்ஸ் போன்ற நிறுவனங்கள் தமது இலாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் சரியான விலையில் தரமான சேவையை வழங்க வேண்டும்.
தற்போது காணப்படும் எரிபொருள் வரிசைகளுக்குப் பின்னாலும் ஜே.வி.பி உள்ளிட்ட தரப்பினரின் கைவரிசை உள்ளது. கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எரிபொருளைப் பதுக்கி வைத்து போத்தல்களில் 2000 ரூபாவுக்கு விற்றவர்கள் இவர்களே. இவர்களது ஆதரவாளர்களே எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் வரிசைகளில் நின்று தேவையற்ற அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்குகின்றனர்.
தற்போது நாட்டில் எரிபொருள் கையிருப்பு தாராளமாக உள்ளது. எனவே அரசாங்கம் உடனடியாக ஜே.வி.பி உறுப்பினர்களின் வீடுகளைச் சோதனையிட வேண்டும். அங்கு சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை காண முடியும். மக்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சிகளில் சிக்கி எரிபொருளைத் தேவையற்ற முறையில் சேமிக்க வேண்டாம் என்றார்.