நுவரெலியா மாவட்டத்தில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தேயிலை பயிர்செய்கையை அழித்துவிட்டு அதற்கு பதிலாக மரக்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதால் நுவரெலியா பகுதி பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று நுவரெலியா மாவட்ட விவசாய சங்கத்தின் தலைவர் தரிந்து ரத்னாநாயக்க தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது,
நுவரெலியா மாவட்டத்தின் அடையாளமாகத் திகழும் தேயிலை பயிர்ச்செய்கை தற்போது பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. நீண்டகாலமாகப் பாதுகாக்கப்பட்ட பசுமையான தேயிலை மலைகள், குறுகிய கால இலாபத்தை நோக்கமாகக் கொண்ட மரக்கறி பயிர்ச்செய்கைக்காக வேரோடு பிடுங்கி எறியப்பட்டு வருகின்றன. சுமார் 25,000 ஏக்கருக்கும் அதிகமான தேயிலை நிலங்கள் ஏற்கனவே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடல் மட்டத்திலிருந்து 5,000 அடிக்கும் அதிக உயரத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான மலைச்சரிவுகள் இவ்வாறு நிலப்பண்படுத்தல் என்ற பெயரில் சிதைக்கப்படுவது நுவரெலியாவின் இயற்கை அழகையும் அதன் வெப்ப நிலையையும் மிக மோசமாகப் பாதித்துள்ளது. இந்த நிலமாற்றம் காரணமாக நுவரெலியா பிரதேசம் பாரிய மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
இதேவேளை, சமூக ஆர்வலர்களான ஹசித வீரசிங்க மற்றும் சுனில் குணசிங்க தெரிவிக்கையில்,
தேயிலைச் செடிகள் மண்ணை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளும் தன்மை கொண்டவை; அவற்றை அகற்றிவிட்டு மரக்கறி பயிரிடுவதால் மண்ணின் உறுதித்தன்மை குறைந்து, மழைக்காலங்களில் பாரிய அளவில் மண்சரிவுகள் ஏற்படுகின்றன.
இது வீதிகள் மற்றும் மக்களின் குடியிருப்புகளுக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து எதிர்காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலையும் உருவாக்கியுள்ளது. மண்ணைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இத்தகைய செங்குத்தான சரிவுகளில் பயிர் மாற்றங்களைச் செய்யக் கடும் தடைகள் இருந்தபோதிலும், சட்டவிரோதமான முறையில் தேயிலை மலைகள் எரிக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றன.
2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இந்த நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில், நுவரெலியாவின் இயற்கை சமநிலையைப் பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், எதிர்காலத்தில் இப்பகுதி மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு பிரதேசமாக மாறும் என்று தெரிவித்துள்ளனர்.