ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை “பகிரங்கமான போர்க்குற்றம்” என்று ஈரான் கடுமையாகச் சாடியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே காரணம் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baqaei) குற்றம் சாட்டியுள்ளார்.
இது ஈரானின் கலாச்சார பாரம்பரியத்தை அழிக்கும் நோக்கில் செய்யப்பட்ட ஒரு “கொடிய குற்றம்” என்று தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட கொலெஸ்தான் அரண்மனை வளாகத்தின் ஒரு பகுதி திங்கட்கிழமை நடந்த இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலாச்சார இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாவது குறித்து யுனெஸ்கோ அமைப்பு தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளதுடன், இத்தகைய இடங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.
இது வெறும் இராணுவத் தாக்குதல் மட்டுமல்ல, ஒரு நாட்டின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி என ஈரான் தரப்பு வாதிடுகிறது.