ஏப்ரல் 30, 2026 – அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய 10 அரசாங்க கடன் திருப்பிச் செலுத்தும் பரிமாற்றங்கள், உரிய தரப்பினரைச் சென்றடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் (CoPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய CoPF கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் பின்வரும் முக்கிய விபரங்களை வெளியிட்டார்:
-
நிதி விபரம்: கடந்த நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 10 கொடுக்கல் வாங்கல்களின் மொத்த மதிப்பு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
-
தாமதமான உறுதிப்படுத்தல்: இந்த விவகாரம் தொடர்பான சந்தேகங்கள் முதன்முதலில் ஜனவரி மாதம் எழுந்துள்ளன. இருப்பினும், குறித்த அவுஸ்திரேலிய தரப்பினருக்கு எந்தவொரு கொடுப்பனவும் கிடைக்கவில்லை என்பது மார்ச் மாதத்தில்தான் அதிகாரிகளால் நேரடியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
-
விசாரணைகள்: இது குறித்து நிதியமைச்சினால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவிற்கும் (Sri Lanka CERT) தகவல் வழங்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் நீதிமன்றங்கள் ஊடாக இதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது தீர்மானிக்கப்படும்.
-
பொறுப்புக்கூறல்: இந்தச் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்திற்கோ அல்லது நிதிக்குழுவிற்கோ முன்கூட்டியே ஏன் தெரிவிக்கப்படவில்லை என்பது உள்ளிட்ட பாரிய நடைமுறைச் சிக்கல்களைக் குழு அடையாளம் கண்டுள்ளதாக ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
-
அடுத்தகட்ட நடவடிக்கை: இந்தச் சம்பவம் குறித்து ஆதாரங்களுடன் கூடிய முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்க நிதியமைச்சிற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
காணாமல் போன இந்த நிதி மீண்டும் மீட்கப்படாவிட்டால், அதன் சுமை இறுதியில் வரி செலுத்தும் பொதுமக்களின் மீதே சுமத்தப்படும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
இன்றைய கூட்டத்தில் திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.