திருகோணமலை கடற்படைத் தளத்திற்குள் அமைந்துள்ள “கன் சைட்” (Gun Site) என்று அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய வதை முகாமை மூடுவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த இடத்தில் சுமார் 60 நபர்கள் ரகசியமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கப்பம் பெறுவதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும், அத்துடன் மேலும் பல கடுமையான குற்றச் செயல்கள் இங்கு அரங்கேறியுள்ளதாகவும் விரிவான விசாரணைகளில் தெரியவந்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த உத்தியோகபூர்வ பரிசோதனையை மேற்கொள்வதற்காகத் திருகோணமலை நீதவான் நாளை (18) இப்பகுதிக்கு விஜயம் செய்ய உள்ளார்.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான தற்போதைய நீதிமன்ற வழக்குக்கு மேலதிகமாக, இந்த ரகசிய முகாமில் வேறு பல நபர்களும் அடைத்து வைக்கப்பட்டிருந்ததற்கான கூடுதல் ஆதாரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.
இவற்றில், கேகாலையைச் சேர்ந்த சாந்தா என்பவருடன் தொடர்புடைய வழக்குத் தற்போது பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பில் இரண்டு தமிழ் இளைஞர்கள் காணாமல் போனமை குறித்த விசாரணைகள் கொழும்பு நீதவான் நீதிமன்ற இலக்கம் 3 இல் அறிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், இப்பகமுவவைச் சேர்ந்த பிரதீப் என்ற நபர் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு யுவதிகள் காணாமல் போனமை தொடர்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த முகாமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபர்களும், அதன் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த சிலரும் தற்போது நீதவான் முன்னிலையில் ரகசிய வாக்குமூலங்களை வழங்க முன்வந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் வெளிப்படுத்தியுள்ளனர்.