ஜனநாயகத்தை இல்லாதொழித்து நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. நிறைவடைந்த 2 ஆண்டு ஆட்சியில் ஜனநாயகத்துக்கு எதிராக நான் செயற்படவில்லை.
சட்டவாட்சியை முன்னிலைப்படுத்தியே செயற்பட்டுள்ளேன். ஆட்சியாளர் தவறிழைக்கும் போது அதனை சுட்டிக்காட்டும் உரிமை மக்களுக்கு உண்டு.மிகுதியாகவுள்ள பதவிக்காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். புதிய அரசியல் மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.ஆனால் ஊழல்வாதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனால் தான் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து கூட்டணியமைக்கிறார்கள்.இவர்களின் கூட்டணி அரசாங்கத்துக்கு சவாலல்ல என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அக்குரஸ்ஸ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நிறைவடைந்த இரண்டு ஆண்டுகாலப்பகுதியில் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊழலால் தான் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்தது. மக்கள் எரிபொருளுக்காகவும்,அத்தியாவசிய பொருட்களுக்காகவும் வரிசையில் நின்றார்கள். வங்குரோத்து நிலையின் தாக்கத்தால் மக்கள் இன்றும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால் கடந்த கால அரசாங்கங்களின் ஊழல் ஊடாக சலுகை மற்றும் வரபிரசாதங்களை பெற்றவர்கள் தான் தற்போது ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு பெயரில் கூட்டணியமைக்கிறார்கள். கூட்டணி அமைப்பதற்கான காரணம் அவர்களுக்கே தெரியாது. இவ்வாறான கூட்டணிகளை ஒரு பொருட்டாக கொள்வதே இல்லை.ஏனெனில் மக்கள் என்னுடன் உள்ளார்கள்.
நிறைவடைந்த இரண்டு ஆண்டுகாலப்பகுதியில் வெளியக ரீதியில் ஏற்பட்ட சவால்களை சிறந்த முறையில் வெற்றிக் கொண்டு பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம்.பொருளாதாரத்தின் உச்ச பயனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளேன். 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவிலான வரிகள் குறைக்கப்படும் அல்லது இரத்துச் செய்யப்படும்.
மீண்டெழும் செலவுகளுக்காக வரவு செலவுத் திட்டத்தில் 2000 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும். திறைசேரியை பாதுகாத்துக் கொண்டு தான் சகல அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். 2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் மக்களுக்கு பயனுடையதாகவே அமையும்.
ஜனநாயகத்தை இல்லாதொழித்து நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. கடந்த அரசாங்கங்கள் ஊடகவியலாளர்களை படுகொலை செய்தது, ஊடக நிறுவனங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தியது. வெள்ளை வேன் கலாசாரம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் நாடு தான் பாரிய நெருக்கடிக்கு உள்ளானது. நிறைவடைந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படவில்லை. ஆட்சியாளர்கள் தவறிழைத்தால் அதனை சுட்டிக்காட்டும் உரிமை மக்களுக்கு உண்டு.
அனைவரும் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ளேன்.ஆகவே சட்டத்துக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.நானும் சட்டத்துக்கு உட்பட்டே செயற்படுவேன். கடந்த காலங்களில் சட்டத்துக்கு அப்பாறட்ட வகையில் செயற்பட்டவர்கள் தற்போது சட்டத்துக்கு உட்பட மறுக்கிறார்கள். அதனால் பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பதவிக்காலத்துக்குள் வழங்கிய சகல வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். மக்கள் எமது அரசாங்கம் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அந்த நம்பிக்கையை பாதுகாப்பேன்.போலியான குற்றச்சாட்டுக்களால் மக்களின் நம்பிக்கையை சிதைக்க எவராலும் முடியாது என்றார்.