அரசு புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரான, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை தினமும் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்குமாறு அவரது மனைவியும் சட்டப் பிரதிநிதியும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கான அனுமதியை மறுத்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளருக்கு முகவரியிடப்பட்ட தனித்தனி கடிதங்கள் மூலம் இக்கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சல்லே, சி.ஐ.டி.யின் காவலில் உள்ள நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கு நேற்று (10) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சுரேஷ் சல்லே சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், வைத்தியசாலையின் பார்வையாளர் நேரங்களில் அவரது மனைவியும் மகனும் அவரை தினமும் பார்வையிடுவதற்கு அனுமதிக்குமாறு நீதிமன்ற உத்தரவைக் கோரினர்.
எனினும், சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், அத்தகைய உத்தரவைப் பிறப்பிப்பதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்று கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேகர தீர்ப்பளித்தார்.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, முன்னாள் அரசு புலனாய்வுச் சேவை பணிப்பாளரின் மனைவி, தினசரி வருகைக்கு அனுமதி கோரி சி.ஐ.டி பணிப்பாளரிடம் நேரடியாக மேல்முறையீடு செய்தார். அவரது சட்டத்தரணி அசித் சிறிவர்தனவும், தனது வாடிக்கையாளரின் உடல்நிலையைக் கண்காணிக்கவும், அவரது உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கவும், அத்துடன் அதுகுறித்த முன்னேற்றங்களை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவும் தனக்குள்ள தொழில்முறைப் பொறுப்பைச் சுட்டிக்காட்டி தனியாக ஒரு கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.
மேலும், சுரேஷ் சலே தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுவதால், அவருடன் வழக்கமான தொடர்பைப் பேணுவது அவசியமானது என்றும் சட்டத்தரணி சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், தற்போதைய விசாரணைகளில் அதிகாரிகள் தலையிடக் கூடாது எனவும் வலியுறுத்தி, கட்டுவாபிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள், இன்று (11) நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதியில் உள்ள பால்டியா சந்திக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.