சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புகளைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமது அத்தியாவசியத் தேவைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்க முற்படும்போது அவர் பதிலளிக்க மறுப்பது குறித்துப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்கள், தமக்குரிய இழப்பீடுகள் முறையாகக் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர். இது குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில்:
“வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட எமது விபரங்களைக் கிராம உத்தியோகத்தர்கள் சரியாக சமர்ப்பிக்கவில்லை. இதனால், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவி எமக்குக் கிடைக்காமல் போயுள்ளது. கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மீது நாம் நம்பிக்கையை இழந்துவிட்டோம். இதனாலேயே, எமது குறைகளைத் தெரிவிக்கப் பிரதேச செயலாளர் ஹனிபாவைத் தொடர்புகொள்ளப் பலமுறை முயற்சித்தோம். ஆனால், அவர் எமது அழைப்புகளை ஏற்காமல் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றார்.”
தமது தனிப்பட்ட பொழுதுபோக்கிற்காகவோ அல்லது தேவையற்ற விடயங்களுக்காகவோ தாங்கள் அழைக்கவில்லை என்றும், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் இழைக்கப்படும் அநீதிகள் குறித்து முறையிடவே அவரை நாடுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாகக் குறித்த பிரதேச செயலாளர் ஹனிபாவின் விளக்கத்தைப் பெறுவதற்காக ஊடகவியலாளர் அபு அலா பலமுறை தொடர்புகொள்ள முயன்றபோதும், அவற்றுக்கும் அவர் பதிலளிக்கவில்லை.
பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் ஒரு பிரதேச செயலாளர், மக்களின் பிரச்சினைகளுக்குச் செவிசாய்க்க வேண்டியது அவசியமாகும். மக்களின் ஆதங்கத்தைப் புரிந்துகொண்டு அவர் செயற்படாவிடின், எதிர்காலத்தில் பாரிய மக்கள் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் எனப் பிரதேசவாசிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.