இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் மீது அண்மையில் விதிக்கப்பட்ட தற்காலிக கூடுதல் வரி விதிப்பு (Temporary surcharge) குறித்துத் தமக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என்றும், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்குச் சற்று முன்னர் தாங்கள் அவசரமாக மதிப்புக் கடிதங்களை (LCs) திறக்கவில்லை என்றும் ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (John Keells CG Auto – JKCG) நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்நிறுவனம் இன்று (22) விடுத்துள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில், தற்காலிக கூடுதல் வரியை அறிமுகப்படுத்தி கடந்த 2026 மே 15 ஆம் திகதியிடப்பட்ட 2488/56 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதற்கு முந்தைய நாள், தங்களது நிறுவனம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாகன இறக்குமதியாளர்கள் மதிப்புக் கடிதங்களைத் (LCs) திறந்துள்ளதாகப் பொதுமக்கள் மத்தியில் பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இக் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரித்துள்ள ஜே.கே.சி.ஜி (JKCG) நிறுவனம், இந்த புதிய வரிக் கொள்கை மாற்றம் குறித்து தமக்கு “முன்கூட்டியே எவ்வித உள்ளகத் தகவல்களும் தெரிந்திருக்கவில்லை” (No prior knowledge) என்றும், வர்த்தமானி அறிவித்தலுக்கு முந்தைய நாளில் தாங்கள் இறக்குமதி செய்யும் பி.ஒய்.டி (BYD) ரக வாகனங்களுக்காக எந்தவொரு மதிப்புக் கடிதத்தையும் (LC) திறக்கவில்லை என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
தங்களது பி.ஒய்.டி (BYD) வாகனங்களுக்கான மிக அண்மைய இறக்குமதி ஓடர்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதத்திற்கும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே பதிவு செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏப்ரல் 30 இற்குப் பின்னர், குறிப்பாக 2026 மே மாதத்தில் எவ்வித புதிய மதிப்புக் கடிதங்களும் (LCs) நிறுவனத்தினால் திறக்கப்படவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
மோட்டார் வாகன சந்தையில் ஒரு முன்னணி நிறுவனம் என்ற வகையில், தங்களது வழமையான வணிக நடைமுறைகளின் (Ordinary course of business) ஒரு பகுதியாகவே தாங்கள் தொடர்ந்து வாகனங்களுக்கான ஓடர்களை வழங்கி வருவதாக ஜே.கே.சி.ஜி தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் நுகர்வோருக்குச் சேவையாற்றும் அதேவேளையில், வெளிப்படைத்தன்மை, நல்லாட்சி (Good governance) மற்றும் நாட்டின் அனைத்து சட்டதிட்டங்களுக்கும் இணங்கி நடப்பதற்கான தங்களது நீண்டகால அர்ப்பணிப்பை நிறுவனம் இச் சந்தர்ப்பத்தில் மீள உறுதிப்படுத்தியுள்ளது.