சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ம் கட்ட அகழாய்வில், அடுத்தடுத்து சாயக் கிண்ணங்கள் மற்றும் பழங்காலச் செங்கல் கட்டுமானங்கள் கண்டறியப்படுவது தொல்லியல் ஆய்வாளர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வைகை நதிக்கரை நாகரிகத்தைப் பறைசாற்றும் கீழடியில், ஏற்கனவே 10 கட்ட அகழாய்வுகள் முடிவடைந்த நிலையில், கடந்த மார்ச் 18-ம் தேதி 11-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன.
நீண்ட கால முயற்சிக்குப் பின் கஜேந்திரன் என்பவரது நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அகழாய்வில், 2 மீட்டர் ஆழத்தில் எட்டு அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சி கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தப் பகுதியில் தொடர்ச்சியாகச் சாயக் கிண்ணங்கள் கிடைத்து வருவதால், பண்டைய காலத்தில் இங்குச் செழிப்பான ‘சாயத் தொழிற்சாலை’ (Dyeing Industry) செயல்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சிந்துவெளி நாகரிகத்திற்கு இணையான கட்டுமான அமைப்புகள் இங்குத் தெற்கு திசையில் நீண்டு செல்வதால், கீழடி ஒரு மிகப்பெரிய நகரமாக இருந்திருக்கக் கூடும் என்ற கருத்து மேலும் வலுப்பெற்றுள்ளது. தமிழர்களின் 2,600 ஆண்டுகள் பழமையான நாகரிகத்தையும், தொழில் நுட்ப அறிவையும் உறுதிப்படுத்தும் இந்த ஆதாரங்கள் கீழடி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகின்றன.
#Keezhadi #Excavation #TamilHeritage #SangamAge #Sivagangai #Archaeology #HistoryOfTamilNadu #VaigaiCivilization #BrickStructure #DyeingIndustry #TamilCulture #KeezhadiMuseum #AncientTamil #Discovery #HistoryDaily #ProudTamilian #April30